India

ஜார்க்கண்ட் பா.ஜ.க முதல்வர் மீது வழக்குப்பதிவு: அடிமேல் அடிவாங்கும் ரகுபர் தாஸ்!

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.கவை தோற்கடித்து ஜே.எம்.எம் – காங்கிரஸ் கூட்டணி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான பதவிக்காலம் வரும் 2020 ஜனவரி 5ம் தேதி முடிவடைவடிகிறது. இதனிடையே வரும் 29-ம் தேதி ஜே.எம்.எம். கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

இந்நிலையில் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட்டில் உள்ள மிகிஜாம் காவல் நிலையத்தில் காபந்து முதலமைச்சராக உள்ள ரகுபர் தாஸ் மீது புகார் அளித்துள்ளார். கடந்த டிசம்பர் 19-ம் தேதி தேர்தல் பிரசாரத்தின் போது தன்னை சாதி ரீதியாக ரகுபர் தாஸ் விமர்சித்ததாக புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் காபந்து முதலமைச்சரான ரகுபர் தாஸுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். இதையடுத்து எஸ்.பி அனுஷ்மான் குமார் உத்தரவின் பேரில் ரகுபர் தாஸ் மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைத் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரகுபர் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பா.ஜ.கவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க முதல்வர் ரகுபர் தாஸ் சுயேட்சை வேட்பாளரிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஜார்க்கண்ட் முதல்வர் சுயேச்சையிடம் தோல்வி முகம் : நாடு முழுவதும் வெளுக்கும் பா.ஜ.க காவி சாயம் !