India

தோல்வியடைந்த பா.ஜ.க.. ஆட்சியில் அமரும் ஹேமந்த் : ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகளின் கதாநாயகன் இவரா ?

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளார் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் இளம் வயது முதலமைச்சர் ஹேமந்த் சோரன். இவரது வயது 44.

இவர், ஜார்க்கண்ட்டின் பழங்குடியின மக்களின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஷிபு சோரனின் இரண்டாவது மகன். மிகப்பெரிய சக்தியாக விளங்கிய பா.ஜ.க.,வை வீழ்த்திக் கட்டிலில் அமர்ந்துள்ளார் ஹேமந்த். இது எப்படி நிகழ்ந்தது ? ஹேமந்த் சோரனின் வரலாறு என்ன ? என்பதைப் பார்ப்போம்.

இன்று ஜார்க்கண்ட் மக்களால் மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாட்டின் பார்வையே தன் பக்கம் திருப்பியுள்ளார் ஹேமந்த். ஆனால் ஷிபு சோரனின் அரசியல் வாரிசாக இருந்தது என்னவோ அவரது மூத்த மகன் துர்கா சோரன்.

எதிர்பாராத விதமாக கடந்த 2009ம் ஆண்டு துர்கா சோரன் விபத்து ஒன்றில் மறைந்ததை அடுத்து, ஹேமந்த் அரசியல் வாழ்வில் இறங்கினார். இதனால் தான் படித்து வந்த பி.இ. மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கை பாதியிலேயே கைவிட்டார்.

முன்னதாக, 2005ம் ஆண்டு தும்கா தொகுதயில் போட்டியிட்ட ஹேமந்த சோரன் தோல்வியை தழுவியதால் அரசியலை விட்டு விலகி இருந்தார். 2009 ஜூன் முதல் மாதம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன் பின்னர் 2009ம் ஆண்டு, துர்கா சோரன் உயிரிழந்ததை அடுத்து தும்கா தொகுதியில் மீண்டும் போட்டியிட்டு முதல் முறையாக தன்னுடையை வெற்றியை பதிவு செய்தார் ஹேமந்த்.

2010ல் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் அம்மாநிலத்தின் துணை முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி வகித்தார். ஆனால் பா.ஜ.கவுடனான கருத்து மோதலால் அக்கட்சியுடனான கூட்டணியை முறித்து காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் ஜே.எம்.எம் கூட்டணி அமைத்தது.

காங்கிரஸ், ஆர்.ஜே.டி. ஆதரவுடன் 2013-14ம் ஆண்டு டிசம்பர் ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவி வகித்தார். 2014 சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி ஆட்சியை கைப்பற்றியதால் எதிர்க்கட்சித் தலைவரானார் ஹேமந்த்.

அதன் பிறகு, பழங்குடியின மக்களுக்கான குத்தகை சட்டத்தில் பா.ஜ.க.,வின் ரகுபர் தாஸ் அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஜார்க்கண்ட் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்து ஹேமந்த் சோரன் மக்களின் மனங்களை வென்றார்.

தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில மக்களின் நலனுக்காக பா.ஜ.க அரசை எதிர்த்து கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஹேமந்த் நடத்திய போராட்டங்களுக்கு பலனாக தற்போது மீண்டும் அம்மாநிலத்தின் முதலமைச்சராக அரியணை ஏறுகிறார்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பா.ஜ.க தன் வசம் இருந்த 5 மாநிலங்களில் தனது ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளது. இருப்பினும் மத்தியில் ஆட்சியில் இருப்பதை வைத்து ஜனநாயகத்தின் தூண்களை உடைக்க பாசிச பா.ஜ.க முயற்சித்து வருகிறது. அது நடக்க வாய்ப்பில்லை என்பது ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் முடிவுகளில் இருந்து புலனாகி உள்ளது.