India
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு: தேசிய விருதை புறக்கணித்த திரைப்பட இயக்குநர்!
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, தற்போது பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் அமல்படுத்தப்பட்ட இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி, மேற்குவங்கம், திரிபுரா மற்றும் அசாம் மாநில மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள ஜனநாயக அமைப்பினர் மோடி அரசிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து உருது மொழிபெயர்ப்பாளரும், மூத்த எழுத்தாளரும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் உருது துறைத் தலைவருமான பேராசிரியர் யாகூப் யாவர், உத்தர பிரதேச உருது அகாடமியிலிருந்து பெற்ற அகாடமி விருதினை திருப்பித் தருவதாக அறிவித்தார்.
இந்நிலையில், ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ என்ற மலையாள படத்துக்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜகாரியா முகமது Zakariya Mohammed தேசிய விருது விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ 66-வது தேசிய திரைப்பட விருது விழாவில், சிறந்த மலையாள மொழிப் படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக, கேரளாவைச் சேர்ந்த இயக்குநர் ஜகாரியா முகமது தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குடியுரிமை சட்டத்திற்கு எதிரான எனது போராட்டம், நானும் ‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ பட குழுவினரும் எழுத்தாளர் முஹ்சின் பராரி மற்றும் படத்தின் தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து தேசிய திரைப்பட விருது விழாவில் இருந்து விலகி இருப்போம்” என தெரிவித்துள்ளார்.
‘சூடானி ஃப்ரம் நைஜீரியா’ என்ற திரைப்படம் பரவலான பாராட்டுகளையும் பல விருதுகளையும் வென்ற படம் ஜகாரியாவின் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!