India

“மகாத்மா காந்தியை மீண்டும் ஒருமுறை சுட்டுக் கொன்றதற்கு சமம்” - பா.ஜ.க அரசுக்கு வைகோ கண்டனம்! #CAB2019

சென்னை விமான நிலையத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சுதந்திர இந்தியாவில் அண்மைக்காலமாக அடுக்கடுக்கான அபாயகரமான முடிவுகளை மோடியின் அரசு எடுத்து வருகிறது. காஷ்மீர் மக்களுக்குத் தந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு 370வது அரசியலமைப்பு சட்டப்பிரிவை நீக்கியதால் காஷ்மீர் பற்றி எரிகிறது.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் மேலும் ஒரு மசோதாவை நிறைவேற்றியிருக்கின்றனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து எந்த மத நம்பிக்கையுடைவரும் வரலாம் வந்து குடியுரிமை பெறலாம். ஆனால் இஸ்லாமியர்களுக்கு பொருந்தாது என்று கூறியது மீண்டும் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றதற்கு ஒப்பாகும்.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் பற்றி கவலைப்படாத அரசு பா.ஜ.க அரசு. 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்கள அரசால் இனப்படுகொலைக்கு ஆளாகி வந்து இந்தியாவில் தங்கியுள்ளவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லை. இனப்படுகொலை செய்த கோத்தபய ராஜபக்சேவுடன் கைகுலுக்கிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று நாடாளுமன்றத்தில் கூறினேன்.

பொருளாதாரம் மீட்க முடியாத வீழ்ச்சிக்கு சென்றுகொண்டு இருக்கிறது. இதை மீட்க வழியில்லை. நாட்டின் மொத்த பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால் கோடிக்கணக்கானவர்க்ள் வேலை இழந்து உள்ளனர். மக்கள் கவனத்தைத் திருப்புகின்ற வகையில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது மத்திய அரசு.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: குடியுரிமை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு : கட்சியிலிருந்து விலகும் பா.ஜ.கவினர்!