India

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்றால் அரசுக்கு இவ்வளவு இழப்பா? - பொதுத்துறை வங்கிகள் அதிர்ச்சி தகவல்!

மத்தியில் பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது முதல் பொதுத்துறை நிறுவனங்களை அம்பானி, அதானி போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் வேலைகளையே மும்முரமாக செய்துவருகிறது.

பா.ஜ.க அரசின் இந்த தனியார் மயமாக்கல் நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், அவை எவற்றுக்கும் செவி மடுக்காமல் தனியாருக்கு ஒப்படைக்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்க மோடி அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பி.பி.சி.எல். நிறுவனத்தை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் பொதுத்துறை வங்கி அதிகாரிகள். இது தொடர்பாக அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை அதன் பங்கு மதிப்பின் படி, தனியாருக்கு ரூ.74 ஆயிரம் கோடிக்கு மட்டுமே மத்திய அரசால் விற்பனை செய்ய முடியும். அதன் வெளிச்சந்தை மதிப்பை கணக்கிட்டால் அரசுக்கு 4 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று புதிய நிறுவனத்தை உருவாக்கினால் 9 லட்சம் கோடி ரூபாய் வரையில் இழப்பு ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கெனவே பொருளாதார மந்தநிலை காரணமாக சிறு குறு தொழில்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை நசுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. ஆனால், இவற்றுக்கு எதற்கும் கவலைகொள்ளாமல், பொருளாதாரத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைப்பதை மட்டுமே செய்து வருவது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வருவதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.