India

“சட்டங்களைக் காட்டிலும் நிர்வாகத் திறனே இப்போதைய தேவை” - வெங்கய்யா நாயுடு அதிருப்தி பேச்சு!

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நாட்டில் சீரழிந்துள்ள சட்டம் ஒழுங்கு பிரச்னையால் குற்றவாளிகள் சுதந்திரமாக வெளியே நடமாடுகிறார்கள்.

இதனை தடுக்க அரசு போதிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள்கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவங்கள் குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு புனேவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பேசினார்.

அப்போது, “நாட்டில் பெண்களை தாயாகவும், சகோதரியாகவும் கருதுவதே நமது கலாச்சாரம், ஆனால் தற்போது அப்படி நடக்கவில்லை; தற்போது நிகழும் சம்பவங்கள் உண்மையில் வெட்கப்பட வேண்டியவை. இதனை நாம் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, இதுபோல சம்பவங்கள் தொடராமல் இருக்க சபதம் ஏற்போம்” எனத் தெரிவித்தார்.

Also Read: தொடரும் பாலியல் கொலைகள் : பா.ஜ.க ஆளும் திரிபுராவில் வன்கொடுமைக்கு ஆளான 17 வயது மாணவி எரித்துக்கொலை

தொடர்ந்து பேசிய அவர், “இதுபோன்ற பிரச்னைகளின்போது சட்டம் கொண்டுவர சொல்கிறார்கள். நிர்பயா விவகாரத்தில் நாம் புதிதாக சட்டம் கொண்டு வந்தோம். ஆனால் அதனால் என்ன ஆனது? பிரச்னைக்கு தீர்வுதான் கிடைத்ததா?” என கேள்வி எழுப்பினார்.

மேலும், இதன்மூலம் நான் புதிய சட்டங்களுக்கு எதிரானவன் எனக் கருதவேண்டாம். இந்த சமூக கொடுமைகளை சட்டத்தினால் தடுக்கமுடியாது. அதனைத் தடுத்து நிறுத்த சட்டங்களைக் காட்டிலும் அரசியல் துணிவு மற்றும் நிர்வாகத் திறன் போன்றவையே இப்போது தேவை என்பதே என் கருத்து” எனத் தெரிவித்தார்.