India

கோடிகள் புரளும் இந்திய மருத்துவ சந்தை : 36 இந்திய தயாரிப்புகள் தரமற்றவை - மத்திய அரசு வெளியிட்ட பட்டியல்

சர்வதேச அளவில், நோய்களுக்கான எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளின் மார்க்கெட் சந்தை மதிப்பு பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாயாக உள்ளது. இந்த மதிப்பு மாதம் மாதம் உயர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், தடுப்பூசிகள் போன்றவை உலக அளவில், அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பல்வேறு தொழில் நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டின் மீது மருந்து உற்பத்தி நிறுவனங்களின் பார்வை இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக, உற்பத்தியாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்திய மருந்துத் தொழில் துறையானது, 2017ல் மட்டும் ரூ. 2.3 லட்சம் கோடி மதிப்பைக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு ஆண்டும் 11-12% வளர்ச்சியடைந்தால், 2030ம் ஆண்டில் 8.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உலகளாவிய ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி அதன் அறிக்கையில், உலகில் மருந்து விற்பனையில் இந்தியா மூன்றாவது இடத்திலும், மொத்த மதிப்பில் பத்தாவது இடத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெளிநாடுகளில் இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படுகிற மருந்துகளின் தரம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து ஆய்வு நிர்வாகம் (USFDA) மருந்துகளின் தரம், மருந்து மூலப்பொருள், மாசுபாடு, தரவு மேலாண்மை மற்றும் தூய்மை ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்சனை இருப்பதாக மருந்து நிறுவனங்களுக்கு 38 நோட்டீஸ் அனுப்பியது. அதில் 13 நோட்டீஸ் இந்திய மருந்து நிறுவனங்களுக்கானது.

அதன்பின்னரே இந்தியாவின் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் இந்தியாவில் பயன்படுத்தப்படும் மருந்துகளின் தரத்தை ஆய்வு செய்தது. அதில், 36 இந்திய தயாரிப்பு மருந்துகள் தரமற்றதாகவும், போலியானதாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதில் மற்றொரு அதிர்ச்சி தகவல் என்னவெனில், பொதுவாக காய்ச்சல் ஏற்படும் போது பயன்படுத்தும் பெரும்பாலான மருந்துகள் தரமற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரமற்ற மருந்துகளின் பட்டியலை மத்திய அரசின் மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்தில் (https://cdsco.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.

இதுபோல பிரச்சனைகளை முன்பே கவனிக்கப்பட்டாததற்கு மத்திய, மாநில அரசுகள் போதிய எண்ணிக்கையில் மருந்து ஆய்வாளர்களை கொண்டிருக்கவில்லை என்பதே நிதர்சனமான உன்மை.

தற்போது செயல்பாட்டில் இருக்கும் மருந்து உற்பத்தியாளர்கள் பற்றிய தரவுகள் எதுவுமே அரசிடம் இல்லை. விதி மீறுவோருக்கு தண்டனை தராதது போன்றவற்றை இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

உடல்நலன் சரியில்லாத போது பயன்படுத்தப்படும் மருந்துகளில் கூட போலிகள் மருந்துகள் இருப்பது பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பாக்கெட் பாலில் பூச்சிக்கொல்லி மருந்து; 37.7% பால் தரமற்றவை - உணவு பாதுகாப்புத் துறை ஆய்வில் அதிர்ச்சி!