India
மத ரீதியாகக் கூறு போடுகிறதா குடியுரிமை சட்ட திருத்த மசோதா? : இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா !
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க மக்களவையில் பெரும்பான்மையுடன் இருப்பதன் காரணமாக, குடியுரிமை திருத்த மசோதா எளிதில் நிறைவேற்றப்பட்டுவிடும் என்று எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக கடந்த 1955-ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தில் குடியுரிமை திருத்த மசோதாவில் சில முக்கியத் திருத்தங்களைக் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
முன்னர் கொண்டு வந்த சட்டத்தின்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் குடிபெயா்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பார்சி இனத்தவா், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் 7 ஆண்டுகள் வசித்தாலே அவா்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும், கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக வந்துள்ளவர்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் என்றும் தற்போது அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களும், காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தி.மு.க மற்றும் இடதுசாரி கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஆனால், பா.ஜ.க அரசு இந்த சட்டத்தை எப்படியாவது கொண்டுவரவேண்டும் என முயற்சி செய்து வருகின்றது. கடந்தாண்டு இந்த சட்டத்தை பா.ஜ.க கொண்டு வந்தபோது நிறைவேற்ற முடியவில்லை.
இந்நிலையில் தற்போது மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால், குடியுரிமை திருத்த மசோதா எளிதாக நிறைவேறிவிடும். ஆனால், மாநிலங்களவையில் நிறைவேறுமா அல்லது கடந்த முறை போன்று நிறைவேற்ற முடியாமல் தோல்வி அடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஒருவேளை அ.தி.மு.க, பிஜு ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளும் ஆதரவு அளித்தால் மாநிலங்களவையில் இது நிறைவேற வாய்ப்புள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை கூட இருக்கும் குளிர்கால கூட்டத்தொடரின் போது மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இன்று குடியுரிமை திருத்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்லாமியர்களை வெளியேற்றுவதற்கான ‘சதி’!
குடியுரிமை திருத்த மசோதா குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “மத்தியில் ஆளும் மோடி அரசு குடிமக்களை குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றி மக்களை மத ரீதியாக கூறு போடுவதற்கும், பிளவுபடுத்துவதற்கும் தான் கொண்டுவரப்படுகிறது.
இது மிக கடுமையான பிரச்சனைகளை உருவாக்கும். அந்த நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியிருக்கிற இஸ்லாமியர்களை வெளியேற்று வதற்கான சதி அதற்குள்ளே இருக்கிறது என்பது ஒரு மோசமான நடவடிக்கையாகும்.
அது மட்டுமல்ல இலங்கையில் இருந்து கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அகதிகளாக வந்து தமிழகத்தில் குடியேறி இருக்கிற ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். ஆனால், இந்த குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக எதுவும் இல்லை” என தெரிவித்தார்.
Also Read
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
-
“தமிழர்களைப் படிப்பறிவற்றவர்கள் என்பதா? பியூஷ்கோயல் நாவை அடக்கிப் பேச வேண்டும்!” : முதலமைச்சர் கண்டனம்!
-
பெரியார் மண்ணில் அ.தி.மு.க இப்படி பா.ஜ.க-வுடன் கைகோர்த்து நிற்கலாமா? : பழனிசாமிக்கு டி.ராஜா கேள்வி!