India

“கூடங்குளம் சைபர் தாக்குதலில் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல” : எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா!

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் செயல்படுகின்றன. இந்த அணுமின் நிலையத்தில் செயல்பட்டுவந்த கணினிகள் வடகொரியாவைச் சேர்ந்த 'லாசரசு' எனும் குழுவால் ஹேக் செய்யப்பட்டு ‘டி ட்ராக்’ - D TRACK என்ற வைரஸ் மூலம் அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தகவலை இந்தியாவின் முக்கிய சைபர் பாதுகாப்பு ஆய்வாளர்களில் ஒருவரான புக்ராஜ் சிங் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அவரின் இந்த பதிவிற்குப் பிறகு சமூக வலைதளங்களில் வைரஸ் குறித்து பீதி கிளம்பி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால் புக்ராஜ் சிங் வெளியிட்ட இந்தத் தகவலை, கூடங்குளம் அணு உலை நிர்வாகம் முற்றிலுமாக மறுத்தது. இந்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கம்ப்யூட்டர்களில் ‘மால்வேர்’ கண்டுபிடிக்கப்பட்டது உண்மைதான் என இந்திய அணு மின்சாரக் கழகம் அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில், இந்தியாவின் அணு உலையில் இணையம் வழியாக சைபர் தாக்குதல் குறித்து இந்தியா சரிவரக் கையாளவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள் சைபர் தாக்குதல் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்பட்டது.

ஆனால் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அந்தக் கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரிகள், அணுசக்தி துறையில் சர்வதேச விதிமுறைகளையும், நடைமுறைகளையும் மீறி வருவதாகவும், அதனை அமெரிக்கா கண்டித்து வருவதகாவும் கூறியுள்ளனர்.

மேலும், அணு உலை இணையதள முடக்கம் தொடர்பாக இந்தியா எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல. இந்தியாவில் அணுசக்தி துறையில் ஏற்பட்ட இணையவழி நெருக்கடியை இந்திய அரசு சர்வதேச நாடுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றிருக்கவேண்டும். ஐ.நா சபையில் இது குறித்து பேசியிருக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

Also Read: “கூடங்குளம் சைபர் தாக்குதலுக்கு வடகொரியாவே காரணம்” : தென் கொரியா சைபர் நிபுணர்க் குழு தகவல்!