India

“என் மகளின் ஆன்மா சாந்தியடையும்” : என்கவுன்டர் குறித்து பிரியங்காவின் தந்தை உருக்கம்!

ஐதராபாத்தின் சம்ஷாபாத் நரசய்யபள்ளியைச் சேர்ந்தவர் பிரியங்கா. இவர் கால்நடை மருத்துவராக மாதாப்பூரில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், பிரியங்காவை கடந்த 27-ம் தேதி 4 லாரி டிரைவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் முகமது ஆரீப், ஜொள்ளு சிவா, ஜொள்ளு நவீன் மற்றும் சின்டகுன்டா சென்னகேசவலு ஆகிய 4 பேரையும், போலிஸார் இன்று அதிகாலையில் விசாரணைக்காக கால்நடை மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது போலிஸாரின் பாதுகாப்பில் இருந்து 4 பேரும் தப்பியோட முயற்சி செய்துள்ளனர். அவர்கள் தப்பியோடுவதை தடுக்கமுடியாத நிலையில் போலிஸார் 4 பேரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து எரித்துக்கொலை செய்யப்பட்ட பிரியங்காவின் தந்தை ஸ்ரீதர் கூறுகையில், “எனது மகள் எங்களை விட்டுச் சென்று 10 நாட்கள் ஆகின்றன. இந்நிலையில் இந்த என்கவுன்டர் நிகழ்ந்துள்ளது. எங்களுக்கு துணையாக இருந்த காவல்துறை தெலங்கானா அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்த என்கவுன்டரால் எனது மகளின் ஆன்மா சாந்தியடையும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பிரியங்காவின் தங்கை பவ்யா கூறுகையில், “எனது அக்கா படுகொலையில் நீதி வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடுவோருக்கு இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்கள் பலர் இந்த என்கவுன்டருக்கு ஆதரவும், தெலங்கானா போலிஸாருக்கு வாழ்த்துகளும் தெரிவித்து வருகின்ற அதே வேளையில், மனித உரிமை மீறல் எனவும் குற்றம்சாட்டப்படுகிறது.

Also Read: “பெண் மருத்துவரை எரித்துக் கொன்ற குற்றவாளிகளை போலிஸார் என்கவுன்டர் செய்தது எப்படி?" : பரபர தகவல்கள்!