India

"என்னையும் அங்கேயே அழைத்துச் சென்று கொன்று விடுங்கள்" - என்கவுன்டர் செய்யப்பட்டவரின் மனைவி பேட்டி!

கடந்த மாதம் 27ம் தேதி ஐதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டியை 4 லாரி ஓட்டுநர்கள் பாலியல் வண்கொடுமை செய்து எரித்துக் கொலை செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, குற்றவாளிகள் முகமது ஆரீப், சிவா, நவீன், சின்டகுண்டா சென்னகேசவலு ஆகிய 4 பேரையும் போலிஸார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலிஸார் விசாரணைக்காக இன்று அதிகாலையில் கால்நடை மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அப்போது போலிஸாரின் பாதுகாப்பில் இருந்து 4 பேரும் போலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பியோட முயற்சி செய்துள்ளனர். இதனால் அவர்கள் 4 பேரையும் போலிஸார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இதற்கு நாடு முழுவதும் வரவேற்புக் குரல்களும் எதிர்ப்புக் குரல்களும் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து போலிஸாரின் என்கவுன்டரில் பலியான ஆரீப்பின் தாய் கூறுகையில், “அவர்கள் என்ன செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. என் மகன் இறந்துவிட்டான். நிச்சயமாக, இது தவறு. என்னால் பேச முடியவில்லை” எனக் கூறினார்.

சிவாவின் தாயார், “ஐயா, என் மகன் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டால், தயவுசெய்து அவனைச் சுட்டுவிடுங்கள்” என்று கூறினார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மட்டும் ஏன் தண்டனை வழங்கப்பட்டது என்று சிவாவின் தந்தை கேள்வி எழுப்பினார். மேலும், மற்றவர்களும் இதே முறையில் தண்டிக்கப்பட வேண்டும் சிவாவின் தந்தை கூறினார்.

நவீனின் தந்தை கூறுகையில், "சிறையில் அடைக்கப்படுவதற்குப் பதிலாக அவர்களைக் கொல்லும்படி நாங்கள் முன்பே சொன்னோம், ஆனால் அவர்களைக் கொல்வதற்கு முன்பு அவர்களைப் பார்க்க ஒரு வாய்ப்பையாவது எங்களுக்கு வழங்கியிருக்க வேண்டும்" என்றார்.

சென்னகேசவலுவின் தாய் கூறியதாவது “என் மகன் இந்தக் குற்றத்தைச் செய்திருந்தால், அவனையும் எரிக்கவேண்டும். என் மகன் செய்தாலும் தவறு தவறுதான்"எனக் கூறினார்.

சென்னகேசவலுவின் மனைவி கூறுகையில், “அவர் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் என்னை விட்டுப் போய்விட்டார், தயவுசெய்து நீங்கள் அவரைக் கொன்ற இடத்திற்கு என்னை அழைத்துச் சென்று என்னையும் கொன்று விடுங்கள். அவர் இல்லாமல் என்னால் வாழமுடியாது” எனக் கூறினார்.

Also Read: “என்கவுன்டர்களை ஆதரிக்கும் மனநிலைக்குப் பின்னே...” - மனித உரிமை ஆர்வலர்கள் சொல்வது என்ன?