India

வங்கி மோசடி செய்த நீரவ் மோடியை ‘பொருளாதாரக் குற்றவாளி’ ஆக அறிவித்து மும்பை நீதிமன்றம் உத்தரவு

மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். இது குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பின.

இதனையடுத்து, பல மாதங்களாக தலைமறைவாக இருந்த நீரவ் மோடி லண்டனில் இருப்பதை மத்திய அரசு கண்டுபிடித்தது. இந்திய அரசின் அறிவுறுத்தல்படி, லண்டன் போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 5 முறை சிறையில் இருந்தபடி ஜாமீன் கேட்டும், லண்டன் நீதிமன்றம் மனுவை நிராகரித்துவிட்டது.

சமீபத்தில் கூட ஜாமீன் மனுதாக்கலின் போது, “இந்தியாவில் நியாயமான முறையில் விசாரணை நடக்காது. எனவே இந்தியா சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன்” என மிரட்டல் விடுத்திருந்தார். அதனையடுத்து 2020-ம் ஆண்டு ஜனவரி வரை நீரவ் மோடியின் காவலை நீட்டித்து அதிகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்தியாவில் நீரவ் மோடியின் மோசடி குறித்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதனிடையே, வங்கி மோசடி குறித்த நீரவ் மோடியின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது விசாரணைக் குறித்து கேட்டறிந்த நீதிமன்றம், கடனை செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற நீரவ் மோடியை ‘பொருளாதாரக் குற்றவாளி’ என அறிவித்து உத்தரவிட்டது.

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் முடிவடையும் என லண்டன் நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.