India

மாமியாரை கவனித்துக்கொள்ளாத மருமகளுக்கு 3 மாத சிறை? - சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பெற்றோர், மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய பா.ஜ.க அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் பல்வேறு சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் 2007ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலம் மற்றும் பராமரிப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இந்த சட்டத் திருத்தத்தில் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை பராமரிக்கத் தவறினாலோ, பராமரிப்பு செலவை செலுத்தாமலோ இருக்கும் பட்சத்தில் புகார் அளிக்கலாம் என்றும், மூத்த குடிமக்களின் குழந்தைகள் அல்லது மருமகன், மருமகளோ அவர்களை பராமரிக்கத் தவறினால் தீர்ப்பாயத்தை அணுகலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

மேலும் மூத்த குடிமக்களை பராமரிக்கும் இல்லங்கள் கட்டாயம் அரசு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கவேண்டும். அதேபோல இலவச உதவி எண்கள் உருவாக்க வேண்டும் என்றும், மூத்த குடிமக்களின் கோரிக்கைகளை கேட்பதற்கு காவல் நிலையத்தில் அல்லது மாவட்ட அளவிலான சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டு இருக்கிறது.

இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு ரூபாய் 5 ஆயிரம் வரை அபராதமும் மூன்று மாதங்கள் வரை சிறை தண்டனையும் வழங்கப்படும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கு மத்திய அமைச்சர்வை ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில் விரைவில் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

- சி.ஜீவா பாரதி

Also Read: கணவனை இழந்த மருமகளுக்கு மூன்றே மாதங்களில் மறுமணம் செய்து வைத்த மாமியார் : சமூக வலைதளங்களில் பாராட்டு!