India

வங்கியில் சேமிக்கும் பணத்துக்கு எவ்வளவு ‘இன்சூரன்ஸ்’ பெறமுடியும்? - RTI மூலம் வெளிப்பட்ட அதிர்ச்சி தகவல்!

வங்கிகளில் எவ்வளவு பணம் டெபாசிட் செய்திருந்தாலும் அதிகபட்சம் 1 லட்ச ரூபாய் வரை மட்டுமே காப்பீடு பெறமுடியும் என்ற அதிர்ச்சித் தகவல் ஆர்‌.டி.‌ஐ மூலம் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் மக்கள் தங்கள் வருமானத்தை சேமிக்கும் வகையில் பல்லாயிரக்கணக்கான வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளில் சேமிப்பு கணக்கிலும், நிரந்தர வைப்புத் தொகை, நடப்புக் கணக்கு உள்ளிட்ட வழிமுறைகளின்படியும் பணத்தை வங்கிகளில் சேமித்து வருகிறார்கள். வங்கிகளில் சேமிக்கும் பணம் பாதுகாப்பானது என மக்கள் கருதுவதால் வங்கிகளின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், வங்கிகள் திவாலானாலோ, வங்கியால் பணம் தரமுடியாத சூழல் ஏற்பட்டாலோ, பணம் காணாமல் போனாலோ பணத்தை சேமித்து வைத்திருந்தவர்களுக்கு ரூபாய் 1 லட்சம் வரை மட்டுமே காப்பீட்டுத் தொகை வழங்க முடியும் என்று ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதிக்கழகம் ஆர்‌.டி‌.ஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்திருக்கிறது.

வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதிக்கழக சட்டம் 1961 பிரிவு 1ன் கீழ் ஒரு வங்கி தனது வாடிக்கையாளர் டெபாசிட் செய்த பணத்தை கொடுக்க இயலாதபோது அவர்களுக்கு வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உறுதிக்கழகம் பணத்தை வழங்க கடமைப்பட்டு இருக்கிறது.

டெபாசிட் செய்த தொகை, அதற்கான வட்டி ஆகியவற்றின் அடிப்படையில் 1 லட்சம் வரை மட்டும் காப்பீடு தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடிக்கணக்கில் பணத்தைச் சேமித்து வைத்திருந்தாலும், மாத ஊதியம் பெறுபவர்கள் பணத்தை சேமித்து வைத்திருந்தாலும் அதற்கான அதிகபட்ச காப்பீட்டு தொகை என்பது 1 லட்சம் ரூபாய் மட்டுமே என்பது இந்த ஆர்.‌டி.‌ஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. இது சரியான வழிமுறையா என கேள்விகள் எழுந்துள்ளன.

- சி.ஜீவா பாரதி

Also Read: தாயின் கடைசி ஆசைக்காக வங்கி வேலையை துறந்த மகன் - 48,000 கி.மீ பயணத்தில் காத்திருந்த பரிசு: என்ன தெரியுமா?