India

சர்ச்சை கருத்துகளைத் தவிர்க்க மக்களவையில் ‘நடத்தை விதிமுறைகள்’ - நெறிமுறைகள் குழு முடிவு!

2019ம் ஆண்டு பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகான இரண்டாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் மக்களவையில் கோட்சே குறித்த பிரக்யா தாக்கூரின் கருத்து சர்ச்சையாகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையாக கண்டனங்களுக்குப் பிறகு பிரக்யா தாக்கூர் மன்னிப்புக் கோரினார்.

முன்னதாக, சமாஜ்வாடி எம்‌.பி., அஸம் கான் பா.ஜ.க எம்.‌பி., ரமாதேவி குறித்து பேசியது சர்ச்சையாகி பின்னர் மன்னிப்புக் கோரினார்.

மக்களவையில் முரண்பட்ட கருத்துகளை உறுப்பினர்கள் பேசுவதன் மூலம் பிரச்னை ஏற்பட்டு மன்னிப்பு கோரவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இதனைத் தவிர்க்கும் விதமாக நடத்தை விதிமுறைகளை கொண்டு வர பா.ஜ.க மக்களவை உறுப்பினர் வினோத் குமார் தலைமையிலான நெறிமுறைகள் குழு விவாதித்திருப்பதாகவும், அதுகுறித்து மற்ற கட்சிகளின் கருத்துகளைக் கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக மாநிலங்களவையில் நடத்தை விதிமுறைகள் கடந்த 2005ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-சி.ஜீவா பாரதி

Also Read: "மீனவ கிராமங்களைக் காப்பாற்ற நீண்டகால நோக்கில் திட்டம் தேவை” - மக்களவையில் கனிமொழி எம்.பி வலியுறுத்தல்!