India

''இலங்கை தமிழர்களின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும்'' - சி.பி.எம் கோரிக்கை!

ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது எனது முன்னுரிமை இல்லை என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது, “இலங்கையில் நடைபெற்ற தேர்தலில் கோத்தபயா ராஜபக்சே குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏற்கனவே இருந்த அரசு ராஜினாமா செய்த பின்னணியில் இவரது சகோதரர் மகிந்தி ராஜபக்சே பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு புதிய அமைச்சரவையும், பிரதமரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் ராஜபக்சே சகோதரர்களின் ஆட்சியின் போது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழர்கள் மத்தியில் அச்சம் கலந்த சூழல் ஏற்பட்டுள்ளது.

ராஜபக்சே அரசின் அதிகார வர்க்க, மக்கள் விரோதப் போக்கின் காரணமாகவே 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அவரது கட்சி படுதோல்வியடைந்து புதிய கூட்டணி அரசு ஏற்பட்டது. ஏற்பட்ட புதிய அரசு மக்களுக்கு அளித்த குறிப்பாக, தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இலங்கையின் பொருளாதாரம் நிலைகுலைந்து போனதுடன், இவ்வாட்சியாளர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் சேர்ந்து ராஜபக்சே சகோதரர்கள் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

புதிதாக அமைந்துள்ள ராஜபக்சே அரசின் மீது தமிழர்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்ச உணர்வு அடிப்படையற்றதல்ல. இந்நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பது, வாழ்வாதாரங்கள் மேம்படுத்துவது இலங்கை அரசின் கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் முழுவதையும் அம்மக்களுக்கு வழங்குவது, நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வது, தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களிலிருந்து இலங்கை ராணுவத்தை வாபஸ் பெறுவது, காணாமல் போனவர்களை கண்டுபிடித்து ஒப்படைப்பது, தமிழர் பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவதை நிறுத்துவது, அதிகாரத்தை பகிர்ந்தளிக்கவேண்டும்.

மேலும், தமிழ் மக்கள் மற்றும் சிறுபான்மை மக்களது வாழ்வாதார மேம்பாடு திட்டங்களை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதன் மூலமே புதிய அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையை உருவாக்க முடியும்.

மக்களின் பரஸ்பர நம்பிக்கையே இலங்கையின் எதிர்கால வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். எனவே, கடந்த கால துயர வரலாறுக்கு முடிவுக்கட்டி மேற்கண்டவைகளை இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்சே அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும்.

மேலும், தற்போது இந்தியா வந்துள்ள இலங்கை குடியரசுத் தலைவர் கோத்தபயா ராஜபக்சே அவர்களிடம் இந்திய அரசு தனக்குள்ள ராஜ்ஜிய உறவை பயன்படுத்தி தமிழர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க இலங்கை அரசிடம் உறுதி செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.