India

கல்லாப் பெட்டியை விட்டுவிட்டு வெங்காய மூட்டையை திருடிச் சென்ற கொள்ளையர்கள்- விலை உயர்வு செய்யும் வினோதம்

அன்றாட சமையலுக்கு பெரிய அளவில் பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. விலை உயர்வால் சமையலுக்கு வெங்காயத்தை மிகச் சிறிய அளவிலேயே பயன்படுத்தும் நிலைமைக்கு பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நிலைமை இப்படி இருக்க, காய்கறிக்கடைக்குள் புகுந்து வெங்காய மூட்டை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேற்குவங்க மாநிலத்தின் சுதஹாதா என்ற பகுதியில் அக்‌ஷய் தாஸ் என்பவர் சிறிய அளவிலான காய்கறிக்கடை ஒன்றை நடத்திவருகிறார். வழக்கம் போல காலையில் கடையை அக்‌ஷய் தாஸ் திறந்துள்ளார்.

அப்போது கடைக்குள் வெங்காயம் சிதறி கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கல்லாப் பெட்டியில் பணம் காணாமல் போனதா என சோதனை செய்தார். ஆனால், இரவு கடையில் விட்டுச் சென்ற பணம் அப்படியே இருந்துள்ளது.

பின்னர் கடையில் உள்ள வெங்காய முட்டைகளை எண்ணிய போது சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு வெங்காயம் மற்றும் சிறிது இஞ்சி, பூண்டு காணாமல் போனது தெரியவந்தது. இதனையடுத்து அப்பகுதி காவல்நிலையத்தில் இதுகுறித்து அக்‌ஷய் தாஸ் புகார் அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுகுறித்து விசாரணை நடத்திவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பொதுவாக திருட்டு என்றால் பணம் தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் காணாமல் போவது வழக்கம். ஆனால் வெங்காய விலை உச்சத்தில் இருக்கும் போது வெங்காயம் திருடப்பட்டது அப்பகுதி மக்களிடை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: தொடர்ந்து அதிகரிக்கும் வெங்காய விலை : டெல்லி நிலை விரைவில் தமிழகத்துக்கும் வருமா ? - மக்கள் அச்சம்