India

திடீரென ஏரிக்கரை உடைந்து வெள்ளக்காடான பெங்களூரு - நூற்றுக்கணக்கான வீடுகள் பாதிப்பு!

பெங்களூருவின் ஹுலிமாவு ஏரிக் கரை திடீரென உடைந்து ஊருக்குள் நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளத்தால் ஐநூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள முக்கிய ஏரிகளில் ஹுலிமாவு ஏரியும் ஒன்று. இந்த ஏரியின் வடக்கு கரையில் நீர்க் கசிவு ஏற்பட்டு, திடீரென ஏரியின் கரை உடைந்தது. இதையடுத்து தண்ணீர் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியே வெள்ளக்காடானது.

இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த அதிகாரிகள், ஏரியின் உடைப்பை சரி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் 20 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்ட கரையில் எப்படி திடீரென உடைப்பு ஏற்பட்டது என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்தப் பகுதியில் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் வரை அவர்களுக்கு தேவையான உணவுகள், அவசர கால அடிப்படையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏரி கரையின் உடைப்பை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து மேயர் கவுதம் குமார் கூறுகையில், “அப்பகுதியில் உள்ள சிலர் போர்வெல் போடுபவர்களின் துணையுடன் ஏரி கரையில் குடிநீர் குழாய் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஏரிக் கரையின் ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.