India

’சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த சாமியார் நித்தியானந்தா’ - உதவியாளர் கண்ணீர் புகார்

பெங்களூரைச் சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. இவர் சாமியார் நித்யானந்தாவிடம் தனி செயலாளராக இருந்தபோது, பெங்களூரு பிடதி ஆசிரமத்தில் தனது குழந்தைகளை அங்கு சேவை செய்யச் சேர்த்துள்ளார்.

இந்நிலையில் கடந்த நவம்பர் 2ம் தேதி, குஜராத் அஹமதாபாத் நகரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் தனது குழந்தைகளை சந்திக்கச் சென்ற அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிரடைந்த சர்மா, தனது மகளை மீட்டுத்தருமாறு குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவினைத் தாக்கல் செய்து இருந்தார்.

இந்நிலையில், சாமியார் நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கி வீடியோ எடுத்து மிரட்டுவதாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஜனார்த்தன சர்மா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுமிகளுக்குப் பல கொடுமைகள் நடக்கிறது. சிறுமிகளை உடல் ரீதியாக பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி அதனை வீடியோ எடுத்தும் மிரட்டுகின்றனர்.

அந்த வீடியோக்கள் நித்யானந்தாவின் சிஷ்யைகளான ரஞ்சிதா, பிராணபிரியா, பக்திபிரியா ஆகியோரின் மொபைல் மற்றும் கணிணிகளில் உள்ளது.

அங்கிருந்து வெளியேற நினைப்பவர்களை இந்த மூன்று பேரும் துன்புறுத்தி மிரட்டி வருகின்றனர். எனது மகள்கள் போல நூற்றுக் கணக்கான சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவருமே மீட்கப்பட வேண்டும். அங்கிருந்து சிறுமிகளை வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று பலவிதமான குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.

அகமதாபாத் ஆசிரமத்தில் இருந்து குழந்தைகள் என்னை தொடர்பு கொண்டு அழுதனர். நித்யானந்தாவிற்கு உதவிய எங்களுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நித்யானந்தா தரப்பில் இருந்து எங்களுக்கு மிரட்டல்கள் வருகின்றன. நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்து எனது மகள்களை பத்திரமாக மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக சாமியார் நித்தியானந்தா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ள நிலையில், அவரைத் தேடும் பணியை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. இதனால், அவர் விரைவில் கைது செய்யப்படுவாரா என்கிற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.