India

“குடியரசு தின அணிவகுப்பில் கலந்துகொண்டதா ஆர்.எஸ்.எஸ்?"- RTI கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சகம் அளித்த பதில்!

1963ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பங்கேற்றதா?” - இந்தக் கேள்வி பல்வேறு சூழல்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் இந்துத்துவர்களை நோக்கி எழுப்பப்பட்டிருக்கிறது.

லண்டனில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க-வின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸை, அரபு நாடுகளின் இஸ்லாமிய இயக்கங்களுடன் ஒப்பிட்டு, ஆர்.எஸ்.எஸ் இந்தியாவின் இயல்பை மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். ராகுல் மட்டுமல்ல; காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆர்.எஸ்.எஸ் இதுபோன்ற விமர்சனங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 1963ம் ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க சங் பரிவார் தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ் தலைவரான ரத்தன் ஷார்தா, நேரு அழைப்பு விடுத்த அந்த அணிவகுப்பில் 3,000க்கும் மேற்பட்ட சங் பரிவார் தொண்டர்கள் பங்கேற்றனர் என்று தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்ஸின் தேசிய செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யாவும், "ஆர்.எஸ்.எஸ் சுயசேவகர்கள் அரசாங்கத்தால் அழைக்கப்பட்டனர். நாங்கள் அந்த அணிவகுப்பில் பங்கேற்றது அன்றைய செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சொல்வது போல 1963 குடியரசு தின அணிவகுப்புக்கு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை நேரு அழைத்தது உண்மையா? இந்தியாவின் முதல் பிரதமரான நேரு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் சேவையில் உண்மையாகவே ஈர்க்கப்பட்டாரா? எனும் கேள்விக்கு உண்மையான பதிலை அறிய ஆர்.டி.ஐ மூலம் இந்தியா டுடே செய்தி நிறுவனம், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியது.

Mohan Bhagwat

இந்திய பாதுகாப்பு அமைச்சகமே குடியரசு தின அணிவகுப்பு குறித்து தகவல் அளிக்க அதிகாரமுள்ள அமைப்பாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 'இந்தியா டுடே' மூன்று கேள்விகளை எழுப்பி, அதற்கு ஆதாரமாக நேருவின் அழைப்புக் கடிதத்தின் நகலை வழங்கவும் கேட்டுக்கொண்டது.

1. 1962ல் சீனாவுடனான போரின்போது எல்லைகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தன்னார்வத் தொண்டு செய்தனரா?

2. 1963 குடியரசு தின அணிவகுப்புக்கு ஆர்.எஸ்.எஸ் அழைக்கப்பட்டதா?

3. ஆம் என்றால், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க ஆர்.எஸ்.எஸ்ஸை அழைத்தவர் யார்?

'இந்தியா டுடே' செய்தி நிறுவனத்தின் ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய பாதுகாப்பு அமைச்சகம், "1963 குடியரசு தின அணிவகுப்பு தொடர்பான பதிவுகள் கிடைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.

எனில், ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் சொல்வது உண்மையில்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் மன்மோகன் வைத்யா சொன்னதுபோல, அணிவகுப்பில் ஆர்.எஸ்.எஸ் பங்கேற்ற செய்தி அன்றைய செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டிருந்தால் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிடத் தயக்கம் காட்டுவது ஏன் எனவும் கேள்வி எழுந்துள்ளது.