India

அதிகரிக்கும் சாலைவிபத்துகள் : 2018ம் ஆண்டில் மட்டும் 1.5 லட்சம் பேர் மரணம் - அதிர்ச்சி அளிக்கும் அறிக்கை

ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் பலியானர்வர்கள் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்படும். அதன்படி, கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற சாலை விபத்துக்கள் குறித்த ஆண்டறிக்கையைத் தற்போது வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், 2018-ம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துக்களில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பேர் மரணமடைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டை விட இது 2.4% அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தினசரி சராசரியாக 1280 சாலை விபத்துக்களில் 415 பேர் மரணமடைந்துள்ளதாகவும், அதிலும் மணிக்கு 53 சாலை விபத்துக்களில் 17 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில், சாலை விபத்து மரணங்களுக்கு முக்கிய காரணமாக அதிக வேகம் மற்றும் சாலையின் தவறான பக்கத்தில் வண்டியை ஓட்டிச் செல்வது என கூறப்பட்டுள்ளது. அதில் செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டியதால் 2.4% மரணம் நிகழ்ந்துள்ளதாகவும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் 2.8% மரணம் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதேபோல் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் போன்ற வாகனங்களில் ஹெல்மெட் இல்லாததோ, சீட் பெல்ட் அணியாததோ விபத்துக்களுக்கு காரணமாகாவிட்டதாகவும், கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்து மரணங்களில் 43,614 மரணங்கள் ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்டுள்ளதாகவும், காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்று ஏற்பட்ட மரணங்கள் 24,435 ஆகும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த விபத்துகளில் பெரும்பாலும் தமிழ்நாட்டில் நடந்ததாகவும், தமிழகம் சாலை விபத்துச் சம்பவங்களில் முதலிடம் வகிக்கிறது என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக மொத்த விபத்துக்களில் 13.7 % தமிழ்நாட்டில் நடந்துள்ளது. அடுத்த இடத்தில் மத்தியப் பிரதேசம் 11% என்றும், உத்திரபிரதேசத்தில் 9.1% நடந்துள்ளது என்று அந்த ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.