India

தண்ணீர் கேட்டவரை சிறுநீர் குடிக்கவைத்து தாக்குதல்: சிகிச்சை பலனின்றி தலித் இளைஞர் பலி- பஞ்சாபில் கொடூரம்!

பா.ஜ.க ஆட்சியில் நாடு முழுவதும் தலித் மக்களின் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் தலித் இளைஞர் ஒருவரை கடுமையாகத் தாக்கி சிறுநீர் குடிக்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் சங்காலிவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜக்மாலே சிங். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஜக்மாலே சிங்கிற்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த அமர்ஜித் சிங், ரிங்கு, லக்கி, பிந்தேர் ஆகிய நான்கு பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி அமர்ஜித் சிங், ரிங்கு, லக்கி, பிந்தேர் ஆகிய நான்கு பேர் கொண்ட கும்பல் ஜக்மாலே சிங்கை இழுத்துச் சென்று, மரத்தில் கட்டி வைத்து அடித்து கொடூரமாகத் தாக்கியுள்ளனது.

அப்போது வலி தாங்காமல் ஜக்மாலே குடிக்கத் தண்ணீர் கேட்டுள்ளார். அவருக்கு தண்ணீர் கொடுக்காமல், சிறுநீரை குடிக்க வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். பலத்த காயத்துடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் ஜக்மாலே சிகிச்சை பெற்றுவந்தார்.

ஜக்மாலே சிங்

ஜக்மாலே சிங் மருத்துவமனையில் போலிஸ் விசாரணையின் போது வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் அளித்த வாக்குமூலம் ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, ஜக்மாலே சிங்கை தாக்கியவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜக்மாலே சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரைத் தாக்கிய அமர்ஜித் சிங், ரிங்கு, லக்கி, பிந்தேர் ஆகியோரை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்துள்ளனர். தலித் இளைஞர் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.