India

''விபத்தில் இறந்தாரா மகாத்மா காந்தி'' : சர்ச்சையை கிளப்பிய ஒடிசா அரசுப் பள்ளி கையேடு!

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய மகாத்மா காந்தியின் 150 வது பிறந்தநாள் கடந்த அக்டோபர் 2ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அது தொடர்பாக நடைபெற்ற நிகழ்வுகளில் காந்திய சிந்தனைகளும், அவரது கருத்துகளும் நினைவுகூரப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக ஒடிசாவில், காந்தியின் போதனைகளும் அவருக்கும் ஒடிசாவுக்கும் உள்ள தொடர்பை மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் அங்குள்ள அரசு பள்ளிகளில் ‘நமது தேசப்பிதா: ஒரு பார்வை’ என்ற தலைப்பில் அம்மாநில பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இரண்டு பக்கங்களை கொண்ட ஒரு கையேடு வெளியிடப்பட்டது.

Also Read: மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின்னிருக்கும் சதி - அன்றே அம்பலப்படுத்தினார் தந்தை பெரியார்!

அந்த கையேட்டில் 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் தேதி டெல்லி பிர்லா இல்லத்தில் ஏற்பட்ட விபத்தில் இறந்ததாக அச்சிடப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கடுமையான கண்டத்தை தெரிவித்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட மாபெரும் வரலாற்று பிழைக்கு பொறுப்பேற்று முதல் மந்திரி நவீன் பட்நாயக் உடனடியாக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஒடிசா மாநில முன்னாள் மந்திரியும் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவருமான நரசிங்க மிஸ்ரா வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த கையேடுகளை திரும்பப்பெறும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக, குஜராத்தில் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வில், ‘‘மகாத்மா காந்தியடிகள் எப்படி தற்கொலை செய்து கொண்டார்?’’ என்று கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: “காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?” : பிறந்த மண்ணில் மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக் கேள்வி !