India

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாமா? - சீராய்வு மனு மீது உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என அனுமதியளித்து கடந்த ஆண்டு செப்., 28ல் தீர்ப்பளித்திருந்தது உச்சநீதிமன்றம்.

இந்த தீர்ப்பு எதிராக பா.ஜ.க உள்ளிட்ட பல இந்து அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், கேரள அரசோ உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் திட்டவட்டமாக இருந்தது.

இருப்பினும், உச்சநீதிமன்ற தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி 56 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்து வந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இன்று தீர்ப்பு வழங்குவதாகத் தெரிவித்தது.

அதில், 5 நீதிபதிகளில் ரோகிண்டன் நாரிமன், கன்வில்கர் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி சீராவு மனுக்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டனர். அதேசமயத்தில் எஞ்சியுள்ள 3 நீதிபதிகளும் சபரிமலை வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உத்தரவிட்டு சபரிமலை தீர்ப்புக்கு தடை விதிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், மசூதிக்கு பெண்களும் செல்லக் கோரியது, பார்சி மதப் பெண்கள் தொடர்பான வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லும் விவகாரத்தில் தற்போதையே நிலையே நீடிக்கும்.