India

“நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசும்போது கவனமாக இருங்கள் ராகுல்” - வழக்கை முடித்து வைத்த உச்சநீதிமன்றம்!

ராகுல் காந்தி மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.

பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டின. ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் வெளியானதை அடுத்து உச்சநீதிமன்றம் சில கருத்துகளைத் தெரிவித்தது.

இதையடுத்து, மக்களவைத் தேர்தலின்போது பேசிய ராகுல்காந்தி. ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று உச்சநீதிமன்றம் விமர்சித்துவிட்டதாகப் பேசினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதையடுத்து, பா.ஜ.க எம்.பி மீனாட்சி லேகி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, தான் தவறுதலாக மேற்கோள் காட்டிவிட்டதாக வருத்தம் தெரிவித்து ராகுல்காந்தி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தியின் விளக்கத்தில் திருப்தியடையாத உச்சநீதிமன்றம், விரிவாக பதிலளிக்குமாறு ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

ராகுல் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதன்படி, இனி வரும் காலங்களில் ராகுல் காந்தி இன்னும் கவனமுடன் இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கி, வழக்கை முடித்து வைத்தனர்.