India

ஜே.என்.யூ-வை கைப்பற்ற நினைக்கும் பா.ஜ.க - கொதித்தெழுந்த மாணவர்கள்: போலிசுடன் மோதலால் பரபரப்பு!

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழங்களில் ஒன்ற திகழும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஜே.என்.யூ என்று பரவலாக அறியப்படுகிறது. இந்தியாவின் சிறந்த தலைவர்களை உருவாக்கிய பெரிய பங்கினை ஜே.என்.யூ கொண்டுள்ளது. இது மற்ற கல்வி நிலையங்களை விட மாறுமட்டவை.

கடந்த காலங்களில் ஜே.என்.யூ மாணவர்கள் நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு கவனம் ஈர்க்கும் பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். கருத்து சுதந்திரம் பன்முகத்தன்மையை இன்றளவில் தாங்கி பிடித்துள்ளது ஜே.என்.யூ. நாட்டின் முக்கிய பிரச்சனைக்கு ஜே.என்.யூ-வில் உள்ள மாணவர்கள் தான் முதலில் குரல் கொடுப்பார்கள். எங்கு உரிமை மீறல் நிகழ்ந்தாலும் ஜே.என்.யூ சார்பில் கண்டனக்குரல் எழும்.

இங்குள்ள மாணவர்கள் கருத்துச் சுதந்திரத்தையும், உரிமைக்கான போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்வதால் பிற கல்வி நிலைய மாணவர்களுக்கு முன்னோடிகளாக உள்ளனர். அப்படி மீண்டும் ஒரு பெரிய போராட்டத்தை ஜே.என்.யூ மாணவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

சமீபகாலமாக பா.ஜ.க ஆட்சியில் மாணவர்களின் நலன்களுக்கு எதிராக சில நடவடிக்கைகளை பல்கலைக்கழகம் மேற்கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமின்றி, ஆடைக் கட்டுப்பாடு என்ற பெயரில் மாணவர்களின் உரிமையில் தலையிடுவதாக கடந்த வாரம் முதல் இடதுசாரி மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மாணவர்களின் இந்த போராட்டத்தில் பல்கலைக்கழகம் செவி சாய்க்காததால் பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி இன்றும் போராட்டம் தொடர்ந்தது. அதே நேரம் இன்று ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தின் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்க இருந்தார்.

இப்பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு வெளியே ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை பல்கலைக்கழக்கத்திற்குள் நுழையவிடாமல், போலிஸார் இரும்பு தடுப்புகள் கொண்டு தடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் போலிஸாரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்றனர். அப்போது போலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சில மாணவர்களை போலிஸார் வழுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். இதில் பல மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதனால் ஜே.என்.யூ வளாகத்தில் பதற்றமான சூழல் உருவாகியது.

இந்நிலையில் இந்த போராட்டம் குறித்து இந்திய மாணவர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், “மோடி அரசாங்கம் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை கையில் எடுத்துள்ளது. குறிப்பாக அண்மையில் மாணவர்களின் விடுதி கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது.

இதனால் வெளிமாநிலங்களில் இருந்து வரும் மாணவர்களும் மிகுந்த சிரமங்களை சந்தித்துவருகின்றனர். அதேபோல் விடுதி நிர்வாக அமைப்பில் தண்ணீர், உணவு போன்ற சில பிரிவுகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் பல்கலைக்கழகத்திற்கு எதிராக போராடும் மாணவ சங்கங்களை ஒடுக்கும் வகையில், கல்லூரிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் சுமார் 20 ஆயிரம் ரூபாய் அபராதத் தொகை செலுத்த வேண்டும் என புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஆடை விசயத்தில் ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. இதுபோல மாணவர்களின் உரிமையில் தலையீடுவது ஜனநாயக விதிமுறல். இதனை நிர்வாகம் நிறுத்திக்கொள்ளவேண்டும்”என அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் பெருமளவில் திறண்டு போராட்டம் நடத்தி வருவதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.