India

அயோத்தி வழக்கில் பரபரப்பு தீர்ப்பு : அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வேண்டுகோள்!

நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி வருகிறது. தீர்ப்பை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வாசிக்கிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்!

வழக்கு குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் கூறியிருப்பதாவது, “அயோத்தி வழக்கின் தீர்ப்பை பொறுத்தவரை யாருக்கும் வெற்றியோ அல்லது தோல்வியோ அல்ல. எனவே, நாம் அனைவரும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அயோத்தி நில வழக்கு தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், “நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், பரஸ்பர அன்பு ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. மகாத்மா காந்தியின் வழியில் அமைதி மற்றும் அகிம்சையை கடைப்பிடிப்பது நமது கடமை” என்று தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை தமிழக மக்கள் மதித்து நடக்கவேண்டும். தீர்ப்பை மதித்து சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு இடம் தராமல் தமிழகத்தை அமைதிப்பூங்கா மாநிலமாக திகழச் செய்யுங்கள்.

இந்தியாவுக்கே தமிழகம் முன்னுதாரணமாக திகழ அனைத்து மத, கட்சி தலைவர்கள் மற்றும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள்!

“அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் கேரள மக்கள் அமைதி காக்க வேண்டும்” என்று பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.