India

நவம்பர் 8.. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாள்..! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #DeMonetisationDisaster

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்ளையால் கடந்த 2016-ம் ஆண்டு இதே நாளில் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சி வழியே நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, எவ்வித முன்னறிவிப்பின்றி, தீடிரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பு நாட்டுமக்களிடையே பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும், ஒருமாதத்தில் நிலைமை சரியாகிவிடும் என அறிவித்த மோடியால், சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக நிலைமையை சரி செய்ய முடியாமல் போனது. அதனால், பொதுமக்கள் தேவைக்கு பணம் இல்லாமல் தவித்து வந்தனர். குறிப்பாக ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர். அதனால் அப்பாவி மக்களின் உயிர்களும் போனது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் ஒழிக்கப்படுவதோடு, கள்ளநோட்டு புழக்கமும் தடுக்கப்படும் என்ற பிரதமர், பயங்கரவாதிகளுக்கு பணம் செல்லுவது தடுக்கப்படுவதோடு இந்திய பொருளாதாரமும் உயர்த்தப்படும் என்றார். ஆனால் அவர் அறிவித்த எதுவும் தற்போதுவரை கட்டுப்படுத்தப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

குறிப்பாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது செல்லாது என அறிவிக்கப்பட்ட 99.3 விழுக்காடு பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்பி வந்துவிட்டது எனவே இந்த திட்டம் படுதோல்வி என பொருளாதார வல்லுநர்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும், ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால், பேடிஎம் போன்ற வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்கள்தான் பலனடைந்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை சாதாரண மனிதர்கள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கருப்புப் பணத்தை வங்கியில் முதலீடு செய்தவர்கள் குறித்த விசாரணைத் தொடர்பாக மாபெரும் மவுனமே நிலவுவதாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மாபெரும் பிரச்சராத்துக்கு மட்டுமே பயன்பட்டது எனவும் விமர்சித்தார்கள்.

இந்நிலையில், பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன. குறிப்பாக, முன்பு இருந்ததைவிட பொருளாரம் மிகவும் மோசமான நிலைமையை அடைந்துள்ளது. சிறு-குறு நிறுவனங்கள் இன்றி, பெரு நிறுவனங்கள் தங்களது வருவாயை இழந்து, ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர்.

இந்நிலையில் பணமதிப்பிழப்பு பேரிழப்பு என ட்விட்டரில் #DeMonetisationDisaster என்ற ஹேஷ்டாக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பலரும் பணமதிப்பிழப்பின் போது தாங்கள் அடைந்த துயரங்களையும் தெரிவித்து இந்த ஹேஷ்டாக் பயன்படுத்தி வருகின்றனர்.