India

“வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 6 ஆண்டுகளில் 90 லட்சம் பேர் வேலையிழப்பு”- ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

மோடி தலைமையிலான பா.ஜ.க அரசால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. அதனால் சிறு நிறுவனங்கள் முதல் மிகப்பெரிய நிறுவனங்கள் வரை தமது உற்பத்தியை நிறுத்திவருகின்றன. அதனால் அந்த நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் எண்ணற்ற தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

வங்கிகளில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக வங்கிகளின் மூலம் கடன் பெற்று தொழில் செய்வதும் முடியாத காரியமாக மாறியுள்ளது. இதனால் வேலையின்மை முன்பைவிட அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, இந்தியாவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை கடந்த அக்டோபரில் 8.5 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் சி.எம்.ஐ.இ தெரிவித்துள்ளதது.

இந்நிலையில், 2011-12 முதல் 2017-18 வரையிலான 6 ஆண்டுகளில் மட்டும் 90 லட்சம் பேர் வேலை இழந்து உள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2011 - 2012-ம் ஆண்டில் இந்தியாவில் வேலை வாய்ப்பு பெற்றவர்கள் 47.7 கோடியாக இருந்தது.

ஆனால் 2017 - 2018-ம் ஆண்டு 46.5 கோடியாக குறைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் சரசரியாக ஆண்டுக்கு 26 லட்சம் பேர் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இந்திய வரலாற்றில் இந்த அளவுக்கு வேலையிழப்பு ஏற்பட்டிருப்பது இதுவே முதன்முறை என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 2011-12 முதல் 2017-18 வரையிலான 6 ஆண்டுகளில் வேளாண் துறையில் 49 சதவித்தில் இருந்த வேலைவாய்ப்பு 44 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதேபோல், உற்பத்தித் துறையில் 12.6 சதவீதத்தில் இருந்து 12.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

கட்டுமானத் துறையில் 2004 - 2005 முதல் 2011-12 வரை காலகட்டத்தில் 40லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. ஆனால் 2017 - 2018-ம் ஆண்டுகளில் அந்த வேலைவாய்ப்புகள் 6 லட்சம் அளவிற்கு குறைந்துள்ளது எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இதுகுறித்து இந்த ஆய்வுகளை மேற்கொண்ட அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், “கடந்த ஆண்டுகளில் உற்பத்தி துறையில் ஏற்பட்டுள்ள வேலையிழப்புகளினால் மிகப்பெரிய ஆபத்தை இந்தியா சந்திக்கும்.

ஏனெனில், நாட்டில் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கினை ஆற்றிவரும் உற்பத்தி துறையில் அதன் வளர்ச்சி என்பது முக்கியமானது. அதேபோல் கட்டுமானத் துறை. இந்த துறைகள் மூலமே உள்நாட்டு வளர்ச்சியை அதிகரிக்க முடியும்” என ஆய்வின் மூலம் தெரியவந்ததாக அவர் கூறியுள்ளார்.