India

கொல்கத்தாவில் இருந்தபடி வெளிநாட்டவர்களிடம் கைவரிசை காட்டிய போலி கால்சென்டர் : விசாரணையில்அதிர்ச்சி தகவல்!

கடந்தவாரம் கொல்கத்தா காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு போலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, உரிய ஆதாரமின்றி இயங்கிவந்த இரண்டு போலி கால் சென்டர்களுக்கு சீல் வைத்தனர்.

மேலும், கால் சென்டரை நடத்திவந்த 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த கால்செண்டர்கள் வெளிநாடுகளில் உள்ள மக்களிடம் ஏமாற்றி கோடிக்கணக்கில் சுருட்டியுள்ளதாகத் தெரியவந்தது.

இதுகுறித்து போலிஸ் வட்டாரங்கள் கூறியதாவது, “கொல்கத்தா நகரில் மட்டும் 12 போலி கால் சென்டர்கள் இயங்குகின்றன. அந்த கால் சென்டர் நிறுவனங்களின் மூலம் வெளிநாடுகளில் உள்ள மக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர்.

குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் பணியாற்றுபவர்களின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்து மைக்ரோசாப்ட் போன்ற பெரிய மென்பொருள் நிறுவனத்தில் இருந்து அழைப்பதாக பேசுகின்றனர்.

பின்னர், அவர்கள் பயன்படுத்தும் கணினியில் ஒருவித வைரஸ் புகுந்துவிட்டது எனவும் அதனை சரி செய்யவேண்டும் என்றால் ஒருவித மென்பொருளை அவர்கள் கணினியில் இன்ஸ்டால் செய்ய வேண்டும் எனவும் நம்பவைப்பார்கள். அதுபோல செய்த பிறகு, அவர்களின் கணினியை ஆபரேட் செய்து இங்கிருந்து கணினியின் தகவலைப் பெறுவார்கள்.

பின்னர், அவர்களது வங்கி விவரங்கள் உட்பட சொந்த விவரங்களை ஹேக் செய்து, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு அட்டை விவரங்களையும் திருடி பணத்தை சுருட்டிவிடுவார்கள். இந்த மோசடி சம்பவங்கள் மூலம் 4 - 5 லட்சம் வரை பறித்துள்ளார்கள். ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய்க்கு மேல் உலக அளவில் மோசடி செய்து ஏமாற்றியுள்ளனர்.” என்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இவர்கள் மீது தற்போது வரை எந்த வெளிநாட்டவரும் புகார் தெரிவிக்காததால் அவர்கள் அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தமுடியாது என்றும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு போலிஸார் தயக்கம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெளிநாடுகளில் உள்ள போலிஸ் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் அனுப்ப இருப்பதாகவும் போலிஸார் தெரிவித்துள்ளனர்.