India

பொருளாதார நெருக்கடியால் நிறுவனங்கள் தவிக்கும் நிலையில் வேறொரு காரணத்திற்காக வீழ்ந்த இன்ஃபோசிஸ் பங்குகள்!?

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமாகச் செயல்படும் இன்ஃபோசிஸ் உலகின் பல நாடுகளில் தமது கிளையை நிறுவியுள்ளது. இந்நிலையில் கடந்த 20-ம் தேதி அமெரிக்காவின் பங்குச் சந்தை ஆணையத்திற்கு ‘நேர்மையான ஊழியர்கள்’ என்ற பெயரில் புகார் ஒன்று சென்றது.

அந்தப் புகாரை இன்ஃபோசிஸில் பணியாற்றும் ஊழியர்கள் அனுப்பிருப்பது தெரியவந்தது. அதில், நிறுவனத்தில் லாபத்தை பெருக்குவதற்கும், குறுகிய காலத்தில் அதிக ஆதாரத்தைப் பெறுவதற்காகவும் நிறுவனத்தின் சி.இ.ஒ சலில் பரேக் மற்றும் சி.எப்.ஒ அதிகாரி நிலஞ்சன் ராய் இருவரும் கணக்குகளில் மோசடி செய்வதாகவும் இதனை நிரூபிக்க தங்களிடம் தகுந்த ஆதாரம் இருப்பதாவும் கூறி உரிய விசாரணை நடத்தவேண்டும் எனவும் தெரிவித்திருந்தனர்.

இந்த புகார் வெளியானதை அடுத்து சுயேச்சை விசாரணை நடத்தப்படும் என இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நீலகேனி தெரிவித்திருந்தார். இந்த புகார் பிரச்னையால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சுமார் 16 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளன. இந்த சரிவு என்பது கடந்த 6 ஆண்டுகளில் இல்லாதது எனக் கூறப்படுகிறது.

இந்தியாவில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடியால் பல முன்னணி நிறுவனங்கள் சிக்கித் தவிக்கும்போது இன்ஃபோசிஸின் இந்த புகாரால் கடினமான வர்த்தக சூழலை எதிர்கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்ஃபோசிஸ் நிறுவன பங்குகள் கடந்த அக்டோபர் 18-ம் தேதியன்று 767 புள்ளிகளில் வர்த்தகமாகி நிறைவடைந்த நிலையில், இன்று வர்த்தக நேர தொடக்கத்திலேயே சுமார் 75 ரூபாய் சரிந்து 691-க்கு வர்த்தகமாகத் தொடங்கியது. இந்நிலையில் இன்றைய குறைந்தபட்ச விலையாக சுமார் 645 புள்ளிகளை மட்டுமே தொட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஐடி பங்குகள் இன்ஃபோசிஸ் பங்குகளால் அதிக இழப்பை எதிர்கொண்டுள்ளன.