India

தேசத் தந்தையை ‘மகன்’ ஆக்கிய பா.ஜ.க எம்.பி : சர்ச்சை பேச்சால் பரபரப்பு!

சாத்வி பிரக்யா தாக்கூர் பாரதிய ஜனதா கட்சியின் போபால் தொகுதி எம்.பி. இவர் கடந்த 2006ம் ஆண்டு நடைப்பெற்ற மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்படுபவர். இவர் பாபர் மசூதி இடிப்பு, ஹேமந்த் கர்கரே மரணம் போன்றவை குறித்து சர்ச்சை கருத்துக்களைக் கூறி இந்திய முழுவதும் கடும் கண்டனங்களுக்கு உள்ளானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதையே பணியாக வைத்துள்ள பிரக்யா, மக்களவை தேர்தலின்போது “கோட்சே ஒரு தேசியவாதி. தனது வாழ்க்கை முழுவதும் அவர் தேசம் பற்றி யோசித்தார்” என சர்ச்சைக்குரிய கருத்து கூறி, சொந்த கட்சித் தலைவர்களிடமே வாங்கிக் கட்டிக்கொண்டார்.

பின்னர் கட்சி நடவடிக்கைகளுக்கு பயந்து சிலகாலம் அமைதியாக இருந்தவர் மீண்டும் தனது சர்ச்சைப் பேச்சுகளைத் தொடங்கியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபால் ரயில் நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சாத்வி பிரக்யா, ‘‘மகாத்மா காந்தி இந்த தேசத்தின் மகன். அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். அதற்கு மேல் எந்த விளக்கமும் நான் தரத் தேவை இல்லை. காந்தியின் கொள்கைகளின்படி நடப்பேன்’’ என்றார்.

இந்திய தேசத்தின் தந்தை என மகாத்மா காந்தி அழைக்கப்பட்டு வரும் நிலையில், அவரை திடீரென தேசத்தின் மகன் என்று கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, பா.ஜ.க தலைவர்கள் வரலாற்றைத் திரித்து எழுதும் வேலையைத் தொடங்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, சாத்வி பிரக்யாசிங் தனது கருத்தைத் திரும்ப பெறவேண்டும் என பலர் கோரிக்கை வைத்துள்ளனர்.