India

சசிகலா ஆதரவாளர்களை அதிர்ச்சியடையச் செய்த கர்நாடகா சிறைத்துறை இயக்குனரின் பதில்!

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம், சசிகலா சிறையிலிருந்து வெளியேறி ஷாப்பிங் சென்றதாக வெளியான காணொளி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.ஜி ரூபா, சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்படுகின்றன எனும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதுகுறித்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணைக் குழு ஆய்வு நடத்தியது. அந்த விசாரணைக் குழுவின் ஆய்வறிக்கை ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் கசிந்தன.

அந்த அறிக்கையில், ‘சசிகலா லஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகளை அனுபவித்துள்ளார். சிறைத்துறை அதிகாரி சத்யநாராயண ராவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். இரவு உடையில் சசிகலா சிறையிலிருந்து வெளியேறியுள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கர்நாடக மாநிலம் உருவான நாளான நவம்பர் 1ம் தேதியன்று சிறை நன்னடத்தை விதிகளின் படி ஏராளமான கைதிகளை விடுதலை செய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாகவும், அந்தப் பட்டியலில் பா.ஜ.க-வின் பரிந்துரையின் பேரில் சசிகலாவின் பெயரை சேர்க்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், “பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே சசிகலா விடுதலை ஆவார்” என கர்நாடக சிறைத்துறை இயக்குநர் மெக்ரித் தெரிவித்துள்ளார்.

இந்தத் தகவல் சசிகலா தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.