India

40 இடங்களில் வருமான வரி சோதனை.. 50 கோடி பணம்.. 88 கிலோ தங்கம் : சர்ச்சையில் சிக்கிய அடுத்த சாமியார் ?

கல்கி பகவான் ஆசிரமத்திற்கு சொந்தமான 40 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் கோடிக்கணக்கான பணம் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பிறந்த விஜயகுமார் , கல்கி பகவான் எனப் பெயரை மாற்றிக்கொண்டு ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆசிரமம் அமைத்தார். பின்னர் அவரது புகழ் உலகெங்கும் பரவியது.

தமிழ்நாடு, ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கல்கி ஆசிரமத்தின் கிளைகள் உள்ளன. கல்கி சாமியாருக்கு உலகெங்கிலும் பக்தர்கள் இருப்பது மட்டுமல்லாமல், நாட்டின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலமும் உள்ளது.

கல்கி ஆசிரமத்திற்குச் சொந்தமாக சுமார் 1500 கோடி அளவிற்கு சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரமத்தில் பணப் பரிமாற்றம் தொடர்பாக முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதனடிப்படையில் கல்கி ஆசிரமங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3 நாட்களாக அதிரடி சோதனை நடத்தினார்கள்.

வருமான வரித்துறையினர் நடத்திய தீவிர சோதனையில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட மொத்த பணத்தின் மதிப்பு 93 கோடி ரூபாய் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதில், இந்திய பணம் ரூ.43.9 கோடி, ரூ.18 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலர்கள், ரூ.26 கோடி மதிப்பிலான 88 கிலோ தங்கம் மற்றும் ரூ. 5 கோடி மதிப்பிலான வைரம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.