India

“தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி 4.3% இருந்து மைனஸ் 1.1% குறைந்துள்ளது” - உண்மையைப் ஒப்புக்கொண்ட மோடி அரசு !

இந்திய பொருளாதாரம் கடும் தேக்க நிலையைச் சந்தித்து வருகிறது. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை அம்பலப்படுத்தியுள்ளனர்.

மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜி.டி.பி சரிவைச் சந்தித்துள்ளது.

மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடி வாங்கியுள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சி சதவிகிதம் - 1.1 என்ற நிலையை அடைந்திருப்பதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை (MOSPI - Ministry of statistics and programme implementation) தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தொழிற்சாலை உற்பத்தி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 4.8 சதவிகிதம் என்ற வளர்ச்சி நிலையைக் கொண்டிருந்தது.

பின்னர், கடந்த 2019-ம் ஆண்டு ஜூலையிலும் கூட 4.3 சதவிகிதமாக இருந்தது. ஆனால், தற்போது 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் மைனஸ் - 1.1 சதவிகிதம் என்ற மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

உற்பத்தித் துறை -1.2 சதவிகிதம், மின்சாரம் -0.9 சதவிகிதம், மூலதனப் பொருட்கள் -21.0 சதவிகிதம், கட்டுமானப் பொருட்கள் -4.5 சதவிகிதம், நுகர்வோர் சாதனங்கள் -9.1 சதவிகிதம் என இழப்பைச் சந்தித்து இருக்கின்றன.

இது, நாட்டின் 23 முக்கிய தொழில் துறை குழுமங்களில் 15 குழுமங்களின் தொழிற்சாலை உற்பத்தி மைனஸ் நிலைக்கு இறங்கியுள்ளது” என தெரிவித்துள்ளது.

மேலும், இது முந்தைய ஆண்டுகளின் ஆகஸ்ட் மாத முடிவுகளை பார்க்கும்போது மிகவும் குறைவான உற்பத்தி என்று புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.