India

வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்ட உமர் அப்துல்லாவை 68 நாட்களுக்குப் பிறகு சந்தித்த அவரது மகன்கள்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ ரத்து செய்யும் தீர்மானத்தை இரண்டு மாதங்களுக்கு முன்னர் மோடி அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

அதுமட்டுமின்றி, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தையே இராணுவத்தின் பிடியில் கொண்டுவந்து, திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றிய மோடி அரசு, முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்தது.

மேலும், மாநிலம் முழுவதையும் இராணுவத்தின் கட்டுப்பாட்டு வளையத்தில் வைத்துவிட்டு, மக்கள் நிம்மதியாக, வழக்கமான நடைமுறை வாழ்க்கையை வாழ்கிறார்கள் என பொய் பேசி வந்தனர் பா.ஜ.க தலைவர்கள்.

இந்நிலையில், வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் உமர் அப்துல்லாவை நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரது மகன்கள் சமீர் மற்றும் சகீர் சந்தித்துள்ளனர். உமர் அப்துல்லா வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு 68 நாட்கள் ஆகியுள்ள நிலையில், முதன்முறையாக இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

தங்கள் தந்தையைச் சந்திக்க வேண்டும் என அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியிருந்த உமர் அப்துல்லாவின் மகன்கள், அரசிடமிருந்து அனுமதி கிடைத்ததால் தங்கள் தந்தையைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

காஷ்மீரில் உமர் அப்துல்லா சிறை வைக்கப்பட்டுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சுமார் 2 மணிநேரம் தந்தையுடன் நேரத்தை செலவழித்தார்கள். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு தந்தையைச் சந்தித்தால், உமர் அப்துல்லாவின் மகன்கள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

68 நாள் சிறைவாசத்தால் உமர் அப்துல்லா நீண்ட தாடியுடன், மாறுபட்ட தோற்றத்துடன் இருப்பதாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உமர் அப்துல்லாவை அவரது மகன்கள் சந்தித்திருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுதொடர்பான புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.