India

பிளாஸ்டிக்கை கொடுத்தால் உணவு இலவசம் - இந்த ஆஃபர் எங்கு தெரியுமா?

பிளாஸ்டிக் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ள வன உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தையே விளைவித்து வருகிறது. ஆகையால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், தடுக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள அம்பிகாபூரில் கார்பேஜ் கஃபே என்ற உணவகம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்துக் கொடுத்தால் இலவசமாக உணவு கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தை அக்., 09 அன்று சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டி.எஸ்.சிங் டியோ திறந்து வைத்துள்ளார். இது தொடர்பாகப் பேசிய அவர், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு பிளாஸ்டிக் ஒழிப்புக்கு நாடு முழுவதும் குரல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதனை நிறைவேற்றும் விதமாக இந்த கார்பேஜ் கஃபே அமைந்திருப்பது சிறந்த முன்னுதாரணமாக கருதப்படுகிறது என்றார். மேலும், இந்த உணவகம் அம்பிகாபூர் மட்டுமல்லாமல் அம்மாநிலம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது.