India

பங்குச்சந்தை முறைகேடு : மத்திய அரசு, சிபிஐ, செபி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

தேசிய பங்குச் சந்தையில் உறுப்பினர்களாக உள்ள நிறுவனங்கள் பற்றிய விவரங்களை, குறிப்பிட்ட சில நிறுவனங்கள் சட்டவிரோதமாகப் பெற தேசிய பங்குச் சந்தை அதிகாரிகள் அனுமதியளித்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி-க்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரை விசாரித்த செபி, தேசிய பங்குச் சந்தைக்கு சுமார் 700 கோடி ரூபாய் அளவுக்கு அபராதம் விதித்தது. மேலும், புதிய பங்குகளை அறிமுகம் செய்யவும் தடை விதித்தது. செபி மட்டுமல்லாமல், சிபிஐ-யும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

ஆனால், நாட்டிலேயே மிகப்பெரிய முறைகேடாக கருதப்படும் பங்குச்சந்தை முறைகேட்டை முழுமையாக வெளிக்கொண்டு வர செபி-யும், சிபிஐ-யும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சென்னை நிதி சந்தை மற்றும் பொறுப்புடைமை (சென்னை பைனான்சியல் மார்க்கெட்ஸ் & அக்கவுண்டபிளிட்டி) என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த முறைகேடு காரணமாக பல நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு, மத்திய கம்பெனி விவகாரத்துறை, செபி, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, தேசிய பங்குச் சந்தை ஆகியன நவம்பர் 11ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.