India

“பள்ளி,கல்லூரிகள் திறந்தும் மாணவர்கள் வரவில்லை” : ஜம்மு - காஷ்மீரில் முடங்கிக் கிடக்கும் இயல்பு நிலை!

மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதில் இருந்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. 60 நாட்களுக்கு மேலாகியும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

குறிப்பாக அரசியல் கட்சியினர் ஜனநாயக அமைப்பினர் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

ஆனால் இதுபோல எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடக்காததுப்போல் பா.ஜ.க-வினர் ஊடகங்களில் தம்பட்டம் அடித்துவருகின்றனர். ஆனால் தற்போது நிலைமை சீராகி வருகிறது என தெரிவித்தாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை என செய்திகள் வெளியாகி வருகிறது.

குறிப்பாக, தற்போது மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த தடைகள் படிப்படியாகத் திரும்ப பெறப்படுகிறது. மேலும், பள்ளத்தாக்கு முழுவதும் தரைவழி தொலைதொடர்புச் சேவை தொடங்கியுள்ளது.

66- வது நாளான நேற்றும் நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அதிகாலையிலேயே திறக்கப்பட்டன. காலை 11 மணி வரை மட்டுமே கடைகள் இயங்குகின்றன. இந்நிலையில், கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதை போன்று நேற்று அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டன.

பெரும்பாலான பேராசிரியர்கள் பணிக்கு வந்திருந்தனர். ஆனால், மாணவர்கள் யாரும் கல்லூரிக்கு வரவில்லை. அச்சத்தின் காரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்ப தயக்கம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.