India

''பா.ஜ.க-வினர் நீதித்துறையை அற்பமாக நினைக்கின்றனர்'' : அகிலேஷ் யாதவ் தாக்கு!

அயோத்தி பாபர் மசூதி மற்றும் ராமர் கோவில் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. நாள்தோறும் விசாரிக்கப்பட்டு வரும் இந்த வழக்கு நவம்பர் 17-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், “நாம் ராமனின் பக்தர்கள். பக்திக்கு ஏராளமான வலிமை உள்ளது” என தெரிவித்த அவர் விரைவில் நமக்கு நல்ல செய்தி வரும்” என அயோத்தி வழக்கு குறித்து மறைமுகமாக பேசினார். அவரின் பேச்சு நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், முதல்வர் ஆதித்யநாத்தின் பேச்சுக்கு சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில், “நாட்டின் என்ன நடக்கப்போகிறது என பா.ஜ.க-வினருக்கு எப்படி தெரியும், முதல்வருக்கு எப்படித் தெரியும்?” என அகிலேஷ் யாதவ் கேள்வியெழுப்பினார்.

பின்னர், “நமது அரசியல் அமைப்பை குறித்தும், நாட்டின் நீதித்துறைக்குறித்து பா.ஜ.க-வினர் அற்பமாக நினைக்கிறார்கள்” என தெரிவித்தார்.