India

“பலவீனமடைந்த ப.சிதம்பரத்தின் உடல்நிலை; 4 கிலோ எடை குறைந்துவிட்டார்” - உச்சநீதிமன்றத்தில் முறையீடு!

ப.சிதம்பரம் சிறைக்குச் சென்றபிறகு 4 கிலோ எடை குறைந்துவிட்டார். எனவே. அவருக்கு ஜாமின் வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் 21ம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். சிபிஐ காவலில் ப.சிதம்பரம் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 3ம் தேதி வரை நீடித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து.

இதையடுத்து ஜாமின் கோரி ப.சிதம்பரம் சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 30ம் தேதி தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், சிதம்பரத்தின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்தநிலையில் சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கக் கோரி அவரது வழக்கறிஞர் கபில் சிபல் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், “சிதம்பரத்துக்கு 74 வயதாகிறது. அவரது உடல்நிலை குழந்தையின் உடல்நிலையைப் போல பலவீனமாக உள்ளது. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிதம்பரத்துக்கு வழங்கப்படும் உணவு அவருக்கு பழக்கமானதாக இல்லை.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தக் காலத்தில் அவரது உடல் எடை 4 கிலோ குறைந்துவிட்டது. சிபிஐயிடம் விசாரணைக் கைதியாகவும், நீதிமன்றத்தில் விசாரணை கைதியாகவும், அவர் 42 நாட்கள் இருந்துள்ளார். இதற்கு மேலும் விசாரணைக்காக அவர் சிறையில் இருக்க வேண்டிய தேவையில்லை.

அதுபோலவே விசாரணையின்போது போதுமான ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். இதற்கு மேலும் அவர் சிறையில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அது தண்டனையாக அமைந்துவிடும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப. சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் வரும் அக்டோபர் 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.