India
“தீர்வில்லையென்றால் மக்கள் விஷம் குடித்துத்தான் சாவார்கள்”: நிதியமைச்சரின் பதிவுக்கு வாடிக்கையாளர் பதில்!
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி இந்தியாவில் செயல்படும் சிறந்த கூட்டுறவு வங்கியாக இருந்தது. ஆனால் கடந்த 6 மாதங்களில் இந்த வங்கி கடும் நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. குறிப்பாக, வாராக்கடன் மதிப்பு 4,300 கோடி ரூபாயாக மாறியுள்ளது. அதனால் இந்த வங்கியின் நிர்வாகத் திறனை சரி செய்ய ரிசர்வ் வங்கி கடும் கட்டுப்பாடுகளை விதித்தது.
அதாவது, வாடிக்கையாளர்கள் அடுத்த 6 மாதத்திற்கு அதிகபட்சமாக ரூபாய் 1,000 மட்டுமே எடுக்கமுடியும் என உத்தரவிடப்பட்டு பின்னர் 10,000 ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல, புதிதாக எந்தக் கடனும் வழங்கக் கூடாது, டெபாசிட்களும் போடக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. இதற்கு வாடிக்கையாளர்களும், டெபாசிட் செய்துள்ளவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வங்கி தொடர்பாக அரசின் செய்தித்துறை அறிவிப்பை நிர்மலா சீதாராமன் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
அந்த ட்விட்டர் பதிவில், “பி.எம்.சி வங்கி குறித்து பி.ஐ.சி அறிக்கை வெளியிட்டுள்ளது. டெபாசிட் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏதேனும் குறைகள், சந்தேகங்கள் இருந்தால் www.pmcbank.com என்ற இணையதளத்திலும், 1800223993 என்ற இலவச தொலைபேசியிலும் தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வங்கியின் நடவடிக்கையால் விரக்தி அடைந்த வாடிக்கையாளர் ராகேஷ் பட் என்பவர், நிர்மலா சீதாராமன் ட்விட்டர் பதிவை பார்த்ததும் மேலும் ஆத்திரத்தில், “இது ஒரு புதிய விஷயமல்ல, விரைவான தீர்வு தான் தேவை. அதனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இந்த விவகாரத்தை சரி செய்யப் பல வழிகள் உள்ளன. அதனை அரசும் ரிசர்வ் வங்கியும் கையில் எடுக்கவேண்டும். இதை ஒரு சவாலாகக் கூட எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால், மக்கள் தான் விஷம் குடித்து இறப்பார்கள்” என வேதனையுடன் இந்தக் கருத்தை பகிர்ந்திருந்தார்.
அவரது பதிவைப் பார்த்த நிதியமைச்சர் சிறிது நேரத்திலேயே ஒரு பதிலை தெரிவித்துள்ளார். அந்த பதிலில், “இதுபோல அதிதீவிர முடிவான தற்கொலை விஷயங்களைப் பற்றி, பேசுவதையோ, எழுதுவதையோ, ஏன் குறிப்பிடுவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள். பல மாநிலங்களில் உள்ள கூட்டுறவு நிறுவனங்கள் நிதி அமைச்சகத்தின் கீழ் வராது. அவை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ளது” என எச்சரிக்கை விடுக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!