India

ஜெயலலிதா போலி கைரேகை : “அ.தி.மு.க-வை தடை செய்யவேண்டும்” - உச்சநீதிமன்றத்தில் தி.மு.க மனு தாக்கல்!

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா பதிவிட்ட கைரேகை போலியானது என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், அ.தி.மு.க-வை தடை செய்யக்கோரியும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தில், தி.மு.க இன்று வழக்கு தொடர்ந்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், அ.தி.மு.க சார்பில், ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்த, தி.மு.க வேட்பாளர் டாக்டர்.சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘போஸுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் படிவத்தில் பதிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவின் கைரேகை போலியாக உள்ளது. அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்’ எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு நடந்தபோது, போஸ் காலமானார்.

File image

சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ‘ஜெயலலிதாவின் கைரேகை மிகவும் சந்தேகத்துக்கு உரியதாக இருப்பதால் அப்படிவத்தை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்திருக்க வேண்டும். 'வேட்புமனுவில் கைரேகை இடலாம் என சட்டத்தைத் திருத்தி கடிதம் வாயிலாக தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்தது சட்ட விரோதமானது. எனவே, போஸ் வெற்றி செல்லாது’ என உத்தரவிட்டது.

ஜெயலலிதா கைரேகை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் போலி கையெழுத்திட்ட படிவம் வழங்கிய அ.தி.மு.க.,வை தடை செய்ய வேண்டும்.

மேலும், சட்டத்தைத் திருத்தி கடிதம் வாயிலாக ஒப்புதல் அளித்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதன்டி, அ.தி.மு.க மீதும், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில், டாக்டர். சரவணன் இன்று மனு தாக்கல் செய்துள்ளார்.