India

வரும் டிசம்பர் 1 முதல் ‘FasTag’ கட்டாயம்... எங்கெல்லாம் பெற்றுக் கொள்ளலாம்?  என்ன தேவை?

நாடு முழுவதும் பல டோல்கேட்கள் சேவைக்கட்டணம் என்ற பெயரில் அதிகக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் ஒருபுறமிருக்க தற்போது, ‘ஒரே நாடு; ஒரே சுங்க கட்டணம்’ திட்டத்தை ‘FasTag' என்ற முறையில் கொண்டுவரவுள்ளது மத்திய அரசு.

தமிழகத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் ‘FasTag' முறையில் சுங்கக் கட்டண வசூலிப்பு அமலுக்கு வர உள்ளதாக போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “FasTag சிப் மூலம் பணம் வசூலிக்கப்படுவது தமிழகத்தில் இப்போதே செயல்பட்டு வருகிறது. இந்த முறை டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படும்.

இதன் மூலம் டோல்கேட்களில் வாகன நெரிசல் வெகுவாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சில்லறை பிரச்னை, டோல்கேட் ஊழியர்களுக்கும், ஓட்டுநர்களுக்கும் இடையேயான வாக்குவாதங்கள் இனி ஏற்பட வாய்ப்பில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

FasTag-களை எப்படி பெறுவது எனவும் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக விளக்கும் வகையிலான விளம்பரம் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளது.

டோல்கேட் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் மற்றும் சில வங்கிகளிலும் FasTag-களை பெற்றுக் கொள்ளலாம். FasTag பெறுவதுக்கு வாகனத்தின் RC புக், உரிமையாளரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரியை உறுதி செய்யும் அரசு வழங்கிய அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்று உள்ளிட்டவை கட்டாயம்.

வாகனத்தில் FasTag ஒட்டப்பட்டபின், சுங்கச்சாவடிகளை கடக்க யாருடைய உதவியும் தேவைப்படாது. டோல்கட்டில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் FasTag சிப்களில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து, உரிமையாளரின் FasTag கணக்கிலிருந்து பணத்தை வசூல் செய்து கொள்ளும். FasTag-ஐ ரீசார்ஜ் செய்வதற்கு, GPay, PayTM போன்ற செயலிகள் உதவி புரியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.