India

“மோடி அரசுக்கு பொருளாதாரத்தின் அடிப்படை கூட தெரியவில்லை” : பாஜகவை வறுத்தெடுக்கும் சுப்பிரமணியன் சுவாமி!

பொருளாதார பேராசிரியராக இருந்தும் தனக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என நீண்டகாலமாகவே தனது ஆதங்கத்தை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சுப்பிரமணியன் சுவாமி வெளிப்படுத்தி வருகிறார்.

முன்னதாக, இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பிற்கு வந்த மோடி அரசு, சுப்பிரமணியன் சுவாமிக்கு நிதியமைச்சர் பதவி வழங்காததையடுத்து அவர், நிர்மலாவை நிச்சயம் வறுத்தெடுப்பார் என்று பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். அதன்படி, பா.ஜ.க வெளியிட்ட பட்ஜெட்டில் உள்ள பல்வேறு புள்ளிவிவர மோசடிகள் குறித்து அம்பலப்படுத்தினார்.

தொடர்ந்து சரச்சைக்குரிய வகையில், குறிப்பாக பா.ஜ.க-வின் நிலைப்பாட்டிற்கு விரோதமாகவே பேசிவருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. அதன்படி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “இங்கு இருப்பவர்களுக்கு பொருளாதாரம் குறித்து தெரியவில்லை” எனக் கூறினார்.

அதற்கு, “யாருக்குத் தெரியவில்லை” என பத்திரிகையாளர்கள் குறுக்கிட்டு கேள்வியெழுப்பினர். நிலைமையை புரிந்துகொண்ட அவர் “அரவிந்த் சுப்ரமணியம், ரகுராம் ராஜன், அருண் ஜெட்லி என யாருக்குமே பொருளாதாரம் என்றால் என்ன என்று தெரியவில்லை” என்று கூறினார்.

மேலும், சமீபத்தில் மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு பொருளாதாரத்தின் அடிப்படை கூடத் தெரியாது. அதே சிக்கல் தற்போது இந்தியாவில் தொடர்கிறது என தனது கட்சியின் உண்மை முகத்தை அவரே வெளிக்காட்டியது பா.ஜ.க-வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இப்போது நிலவும் பொருளாதார சரிவு குறித்துப் பேசிய சாமி, “நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராகப் பதவிக்கு வந்த பிறகு பொருளாதார நடவடிக்கைகள் சரியில்லை, அவரால் இந்திய பொருளாதாரத்தின் நுண்ணிய பிரச்னைகளை சரி செய்ய முடியவில்லை” என குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி, “திடீரென 1.4 லட்சம் கோடி ரூபாயை கார்ப்பரேட் வரிச் சலுகை என்று காலி செய்துள்ளார்கள். இது இந்தியப் பொருளாதாரத்தின் பிரச்னைகளை தீர்க்கப் பயன்படாது.” என்று அறிவுரையும் வழங்கினார்.

இதற்கு என்ன தீர்வு எனக் கேட்கப்பட்டதற்கு, “தற்போது இந்திய பொருளாதாரத்தின் தேவை என்பது மிகக் குறைவாகத்தான் உள்ளது. இந்த நேரத்தில் அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கொடுத்தால் அரசுக்கு என்ன பயன் கிடைக்கும்? மீண்டும் உற்பத்திதான் அதிகரிக்கும்” எனக் கூறியுள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமிக்கு எப்படி பதில் கொடுப்பது எனத் தெரியாமல் பா.ஜ.க தலைவர்கள் தொடங்கி, தொண்டர்கள் வரை திணறி வருகின்றனர்.