India

படிப்பில் பின்தங்கிய ஐ.ஐ.டி மாணவர்களை இடைநீக்கம் செய்ய முடிவு : மாணவர்கள் அதிர்ச்சி!

மத்திய பா.ஜ.க அரசு ஆட்சி பொறுப்பிற்கு வந்ததில் இருந்து கல்வி விசயங்களில் புதிய திட்டம் கொண்டுவருவதாக கூறி மாணவர்களின் இடைநிற்றலை மறைமுகமாக ஊக்குவிக்கும் வேலையை செய்கிறது.

குறிப்பாக புதிய கல்விக் கொள்கையின் மூலம் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவித்துள்ளது. மேலும் மாணவர்களுக்கு குலக்கல்வியை அறிமுகப்படுத்துவதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் பா.ஜ.க அரசு, கல்லூரி மாணவர்களுக்கு அடுத்தக் குறியை வைத்துள்ளது. குறிப்பாக தற்போது, ஐ.ஐ.டி-யில் படிக்கும் மாணவர்களில் படிப்பில் சற்றே பின்தங்கிய மாணவர்களை இடைநீக்கம் செய்ய மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை கொண்டுவரவுள்ளது.

அதில் பொறியியல் இளங்கலை பட்டப்படிப்பு என்கிற பெயரில் ஒரு பட்டத்தை வழங்கி மூன்று ஆண்டுகளில் இடைநீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக முடிவெடுக்க மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தலைமையில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இதுகுறித்து இந்த கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக படிப்பில் பின்தங்கிய 2461 மாணவர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐ.ஐ.டி படிப்பை பாதியில் விட்டதாக கூறப்படுகிறது.

இந்த ஆண்டு கான்பூர் ஐ.ஐ.டி யிலிருந்து மட்டுமே 81 பேர் இப்படி நீக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த மாணவர்கள் மூன்றாண்டுகள் ஐ.ஐ.டி படித்து முடிக்கும் நிலையில் புதிய பி.எஸ்.சி ( பொறியியல்) என்ற சான்றிதழ் ஒன்றை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் இட ஒதுக்கீடு மூலம் சேர்ந்து படிக்கும் பல ஐ.ஐ.டி மாணவர்கள் பலர் இந்த புதிய திட்டத்தின் கீழ் மூன்று ஆண்டுகளிலேயே நீக்கப்பட வாய்ப்பிருப்பதாக மாணவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.

மேலும், இடைநீக்கம் செய்யப்படும் மாணவர்கள் தங்களின் இடைநிற்றல் குறித்து பல்வேறு காரணங்களை கூறுகின்றனர். குறிப்பாக கல்லூரி வளாகத்திற்குள் நடக்கும் சாதிய முரண்பாடுகள், ஏழ்மை நிலை உள்ளிட்ட காரணங்களில் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.