India

“பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கிகளில் ரூ.1000 க்கு மேல் பணம் எடுக்கமுடியாது” - ரிசர்வ் வங்கி நடவடிக்கை

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் மீது இந்திய ரிசர்வ் வங்கி சில கடுமையான கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் 1,000 ரூபாய்க்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்யமுடியாத நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி இந்தியாவில் செயல்படும் சிறந்த கூட்டுறவு வங்கியாக இருக்கிறது. இந்த வங்கியில் அடுத்த அடுத்த ஆறு மாதங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொது மேலாளார் யோகேஷ் தயாள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கில் 1,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கமுடியாது என்றும் குறிப்பாக சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் பிற டெபாசிட் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி ஆயிரம் ரூபாய்க்கு மேல் எடுக்கமுடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்தவித கடனும் வழங்கக்கூடாது, முன்பு வாங்கிய கடன்களை மீண்டும் புதுப்பிக்கக்கூடாது. எந்தவொரு முதலீட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என்பதுபோன்ற கடும் விதிகளைப் பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.

மேலும், இதில் ஏதாவது பணிகளை மேற்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெறவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களின் நலனுக்காகவும், வங்கியின் நலனுக்காகவுமே எடுக்கப்பட்டதாகவும், வங்கியின் கட்டுப்பாடுகளை மேம்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து வங்கி வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், "நாங்கள் உழைத்துச் சேர்க்கும் பணம் எங்களது தேவைகளுக்கு தான். கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளராக இருப்பவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளிகள். அவர்களின் பணத்தை வைத்துக்கொண்டு அவர்களுக்கே கட்டுப்பாடுகளை விதிப்பது நியாயமல்ல. இது அறிவிக்கப்படாத பணமதிப்பிழப்பு நடவடிக்கை போல் உள்ளது" என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.