India

நீதிமன்றக் காவல் முடிந்து ஆஜர் செய்யப்படவிருக்கும் ப.சிதம்பரம்... அடுத்து என்ன நடக்கும்?

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அடுத்த நாளே (ஆகஸ்ட் 21) ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

பின்னர், சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் சி.பி.ஐ காவலுக்கு அனுப்பப்பட்டார். சி.பி.ஐ காவலுக்கு மீண்டும் மீண்டும் 4 முறை அனுப்பப்பட்ட ப.சிதம்பரத்தை கடந்த 5ம் தேதி நீதிமன்றக் காவலில் வைக்க சி.பி.ஐ நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ப.சிதம்பரத்தின் 14 நாள் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவர் இன்று பிற்பகல் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறார்.

ப.சிதம்பரத்தின் ஜாமின் மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. எனவே, ப.சிதம்பரத்தின் சிறைக்காவல் மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க அரசு, ப.சிதம்பரத்தை பழிவாங்கவும், அவரது அரசியல் வாழ்க்கைக்கு முடிவுகட்டவுமே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டப்படும் நிலையில், ப.சிதம்பரம் தொடர்ந்து பா.ஜ.க அரசின் போதாமைகளை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.