India

இன்றுடன் முடிகிறது கெடு... கைவிரித்த நாசா : லேண்டருடனான தகவல் தொடர்பை மீட்க என்ன செய்யப்போகிறது இஸ்ரோ?

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்ய கடந்த ஜூன் 22ம் தேதி இஸ்ரோ விஞ்ஞானிகளால் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் இரண்டாகப் பிரிந்து நிலவின் சுற்றுப்பாதையில் ஆர்பிட்டர் நிலை நிறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிலவின் தென் துருவப்பகுதியில் தரையிறங்கவிருந்த விக்ரம் லேண்டர் கடந்த 7ம் தேதி தகவல் தொடர்பை இழந்ததால் இலக்குக்கு 1 கி.மீ முன்புள்ள நிலவின் மேற்பரப்பில் விழுந்துள்ளது.

இதனால், விக்ரம் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்த முடியாமல் இஸ்ரோ விஞ்ஞானிகள் தவித்து வந்தனர். இந்த நிலையில், இஸ்ரோவுக்கு உதவிபுரியும் வகையில் நாசாவின் செயற்கைக்கோள் லேண்டர் விழுந்த பகுதியை இன்று கடந்தது.

அதன் மூலம் தகவல் தொடர்பை மீட்டெடுக்கவும், லேண்டரின் நிலையை கண்டறியவும் நாசா விஞ்ஞானிகள் முயற்சித்தனர். ஆனால் அந்த செயற்கைக்கோளால் லேண்டரை படம்பிடிக்கக் கூட முடியவில்லை என நாசா கைவிரித்துள்ளது.

இவ்வாறு இருக்கையில், நிலவில் லேண்டர் இருப்பதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது. அதாவது நிலவின் பகல் பொழுது இன்றுடன் முடிந்து இரவு நேரம் தொடங்க இருப்பதால் அடுத்த 14 நாட்களுக்கு மிகக் கடுமையான குளிர் நிலவும்.

ஆகையால் அந்தக் குளிரில் லேண்டரும், அதனுள் உள்ள ரோவரின் எலக்ட்ரானிக் கருவிகளும் பழுதடைய வாய்ப்புள்ளது. எனவே விக்ரம் லேண்டரை பயன்படுத்த இயலாத நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

எனவே லேண்டருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்த இன்று ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தவித்து வருகின்றனர்.