India

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விடவும் மிகவும் பலவீனமாக உள்ளது - ஐ.எம்.எஃப் தகவல்

இந்திய பொருளாதாரம் கடும் தேக்க நிலையைச் சந்தித்து வருகிறது. ஆட்டொமொபைல் நிறுவனங்களின் வீழ்ச்சி, பல்வேறு தொழில்களின் நசிவு, உற்பத்தி நிறுத்தம், தொழிலாளர் வேலையிழப்பு ஆகியவை பொருளாதார வீழ்ச்சியை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.

மேலும், நடப்பு நிதி ஆண்டின் முதலாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 5.8% என்ற அளவில் இருந்து 5 சதவீதமாக ஜிடிபி சரிவைச் சந்தித்துள்ளது. மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி மரண அடி வாங்கியுள்ளது.

இந்நிலையில், 2019 மற்றும் 2020-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எந்தளவுக்கு இருக்கும் என்று ஐ.எம்.எஃப் கணித்துள்ள மதிப்பீடுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில், ''இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடவும் மிகவும் பலவீனமாக உள்ளது. வங்கிசாரா நிதி அமைப்புகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை, பலவீனங்களுக்கான காரணம்'' எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், தற்போது ஜி.டி.பி 7 சதவிகிதமாக இருந்தாலும், உள்நாட்டில் தேவை அதிகம் உள்ளதால் பொருளாதார வளர்ச்சி பலவீனமாக உள்ளது'' என் கூறியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடையே பேசிய ஐ.எம்.எஃப் செய்தித் தொடர்பாளர் கேரி ரைஸ், ''இந்தியாவின் வங்கிசாரா நிதி அமைப்புகளில் நிலவும் மந்தநிலை மற்றும் நிச்சயமற்ற தன்மை காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததைவிடவும் மிகவும் பலவீனமாக உள்ளது. சில வங்கிசாரா நிதி நிறுவனங்களில் தொடரும் மந்தநிலை, நிச்சயமற்ற நிலையே இந்த பலவீனத்துக்கு காரணம்” என தெரிவித்துள்ளார்.